ரசிகர்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் IPL !

பரவிய செய்தி
IPL போட்டி நடைபெறும் மற்ற மைதானங்களில் டிக்கெட் விலை நூற்றுக்கணக்கில் ஆரம்பிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகிறது. தமிழர்களை முட்டாளாக்கும் IPL.
மதிப்பீடு
சுருக்கம்
ஏப்ரலில் நடக்க உள்ள IPL போட்டிகளுக்கான டிக்கெட்டின் விலை சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
விளக்கம்
இரண்டு ஆண்டு தடைகளுக்கு பிறகு மீண்டும் IPL போட்டிகளில் களம் இறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது. அதுவும் கேப்டன் தோனி தலைமையிலான அணி என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், ஏப்ரலில் நடக்க உள்ள 11 வது IPL போட்டிக்கான டிக்கெட்கள் விரைவாக விற்கப்பட்டு வருகிறது. அதிலும், ஏப்ரல் 7-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டமே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் என்பதால் டிக்கெட்கள் அனைத்தும் முன்பே விற்று விட்டன. எனினும், சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்கள் ஏப்ரல் 2-ம் தேதியே விற்கத் தொடங்கியது. சென்னையில் 7 ஆட்டங்கள் நடக்கும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மட்டும் டிக்கெட்களின் விலை பன்மடங்கு அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
மும்பை, ஜெய்பூர், கொல்கத்தா, மொஹாலி, டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் டிக்கெட் விலை 400, 500, 800 என்றே தொடங்குகிறது. ஆனால், சென்னை மைதானத்தில் மட்டும் குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1300 ஆக உள்ளது.
இதையடுத்து 2,500, 4,500, 5,000, 6,500 ( level 2 % pavilion terrace bay ) ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.www.chennaisuperkings.com , www.bookmyshow.com என்ற இணையத்தளத்தில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதில் குறைந்தபட்ச டிக்கெட் கிடைப்பதில்லை. டிக்கெட் விலையானது மற்ற மைதானங்களில் இல்லாத அளவிற்கு இரண்டு, மூன்று அளவிற்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆட்டத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது. அதில், குறைந்தபட்ச விலையான ரூ.1300-ல், டிக்கெட் விலை ரூ.762 , உள்ளூர் கேளிக்கை வரி ரூ.254 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.284 எனத் தெரிவித்துள்ளனர். மற்ற மைதானங்களில் ஜி.எஸ்.டி மட்டுமே வசூலிக்கப்படுவதால் குறைவாக உள்ளதாக கூறியுள்ளனர்.
மற்ற மைதானங்களிலும் ஜி.எஸ்.டி வரியையும் உள்ளடக்கியே 500, 600, 800 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். எப்படி பார்த்தாலும் குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,300 ரூபாய் என்பது மிகவும் அதிகம் என்பது தெரியவில்லையா உங்களுக்கு?
இங்கு ரசிகர்கள் பயிற்சி ஆட்டத்திற்கும் கூட கேலரிகளை நிறைத்துக் கொண்டு பார்க்கிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்து வருவது இங்குள்ளவர்களை ஏமாற்றும் வேலையாக தெரிகிறது. கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள், ஆனால் IPL பொறுத்தவரை சூதாட்டமும், பேரமும், கருப்பு பணமும் விளையாடுகிற ஒரு இடமாக இருக்கிறது என்பது கடந்த கால வரலாறு.
லலித் மோடி நாட்டை விட்டு பறந்தார். சி.எஸ்.கே நம்மால் கொண்டாடப்படுகிற ஒரு அணி. இது தடை செய்யப்பட்ட காரணம் நினைவிருக்கிறதா ? அதன் நிறுவனர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சூதாட்டம் போன்ற பெரிய சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் IPL, இந்தியாவில் பல பணக்காரர்கள் தங்களது பணத்தை வைத்து விளையாட வழியாகதான் IPL இருக்கிறது. இந்நிலையில், IPL போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும், நடத்த விட மாட்டோம் என தமிழக அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். காவிரி பிரச்சனைக்கு IPL -ஐ புறக்கணித்தால்தான் என்ன என்று ஜேம்ஸ் வசந்த் கருத்து கூறியுள்ளார். IPL-ஐ தடை செய்தால் காவிரி வந்து விடுமா ? என்று கலாய்ப்பையும் , தடை வேண்டும் என ஆதரவும் பெருகி வருகிறது.
காவிரி , Sterlite விவகாரங்களால் கொதித்துப் போராட்டம் நடந்து வரும் வேளையில் இது தரப்போகும் தாக்கம் போராட்டங்கள் மறந்து கிரிக்கெட் கதை பேசுவோம்! IPLக்கும் காவிரிக்கும் நேரடியாக என்ன தொடர்பு , அதை தடை செய்தால் காவிரி வருமா? என்பதை தாண்டி கிரிக்கெட்டை சூதாட்டமாக்கி, பல முறைகேடுகளை அரங்கேற்றும் IPL -லில் டிக்கெட் விலையேற்றி தமிழகத்தில் மட்டும் ஒரு எக்ஸ்ட்ரா வசூல் செய்ய முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. ரசிகனிடம் காசை வாங்கலாம், கொள்ளை அடிக்கக் கூடாது.
மொத்தத்தில் நல்லா கல்லாக் கட்டப் போகிறார்கள்.!