சீமான் குறித்து CSK அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

“நாதகவை சேர்ந்த திரு.சீமான் என்பவருக்கும் CSK அணி வீரர்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. CSK அணி வீரர்களுக்கு பயிற்சி அளித்ததாகவோ, உடன் அமர்ந்து உணவு உண்டதாகவோ திரு.சீமான் கூறினால் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் ஆகும்”. – CSK நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிக்கை வெளியீடு.
Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 16வது சீசன் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 29ம் தேதி நடைபெற்றது. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 

Archive link 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானுக்கும் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சி.எஸ்.கே. அணி வீரர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவோ, உடன் அமர்ந்து உணவு உண்டதாகவோ சீமான் கூறினால் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை என்ன ?

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்துப் பரவும் செய்தி அறிக்கை குறித்து சி.எஸ்.கே அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். அவ்வாறு எந்த அறிக்கையும் அவர்களது பக்கத்தில் பதிவிடப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்தில் செய்திக்கு எனத் தனியாக ஒரு பகுதி உள்ளது. அதிலும் இம்மாதிரி எந்த ஒரு செய்தியையும் இல்லை. மேற்கொண்டு பரவக் கூடிய அறிக்கையில் முதலில் உள்ள இரண்டு பத்திகளுக்கும், அதற்குக் கீழ் உள்ள வரிகளுக்கும் எழுத்துருவில் (Font) வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது. 

Archive link  

எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் இதற்கு முன்னர் ஏதேனும் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா எனத் தேடினோம். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் “For CHENNAI SUPER KINGS CRICKET LIMTED” என்னும் வரிகளுக்குக் கீழே முத்திரை இடப்பட்டுள்ளது. பரவக் கூடிய அறிக்கையிலும் இதே போன்று இருப்பதைக் காணலாம். இவற்றைக் கொண்டு பார்க்கையில், சீமான் குறித்து சி.எஸ்.கே. நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதாகப் பரவக் கூடிய செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க : எலிசபெத் ராணி, சீமான் வைத்துப் பரப்பப்படும் நையாண்டி அறிவிப்பை பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி

இதற்கு முன்னர் எலிசபெத் ராணி இறந்த போது அவருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என எலிசபெத் ராணியின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டதாக ஒரு பொய் செய்தியைப் பரப்பினர். அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சீமான் குறித்து அறிக்கை வெளியிட்டதாக திமுகவினர் பரப்பும் செய்தி உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader