பிள்ளைகள் படிப்பிற்காக பரோல் பெற்றவர் ‘ரயில் மறியலில்’ ஈடுபட்டவர் எனத் தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !
பரவிய செய்தி
தனது பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக கடலூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி செந்தில்குமாருக்கு 28 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக 2012ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது .” எனக் கூறப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
நவம்பர் 25ம் தேதி சன் நியூஸ் சேனலில், “படிப்புக்கு பணம் திரட்ட கைதிக்கு விடுப்பு” எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டது. அதில், தனது பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக கடலூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி செந்தில்குமாருக்கு 28 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக 2012ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது .” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இரயில் மறியலில் ஈடுபட்டதற்காக கியூ பிரிவு காவல் துறையினரால் தடா சட்டத்தில் 2012ல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என நியூஸ் 7 தமிழ், ETV பாரத், நியூஸ் தமிழ் 24X7 உள்ளிட்ட பல சேனல்கள் வெளியிட்டு உள்ளன.
உண்மை என்ன ?
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ” செந்தில்குமார் கடலூர் மாவட்டம் (TNLA Cadre) மற்றும் அவர்களது நண்பர்கள் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கடந்த 24.10.1992ம் ஆண்டு சென்னை-திருச்சி செல்லும் குறுக்கு ரயில் பாதையில் கல்லகம் கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்திற்கு இடையில் இரு தண்டவாளங்களுக்கு இடையில் பாறாங்கற்களை வைத்து அதன் மீது இலை தழையை போட்டு மூடியும், சிக்னல் மற்றும் பெட்டியை உடைத்து நாச வேலை செய்தும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து ரயில்வே பாலத்தை வெடிக்க செய்தும், பொது சொத்திற்கும், உடமைக்கும், உயிருக்கும் சேதம்விளைவிக்க திட்டமிட்ட வழக்கிற்காக விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய கு.எண்.307/1992 U/s 120(B) IPC r/w Sec. 3(2), 4(1) and 5 of TADA Act, 1987, Sec. 3 and 5 of Explosive Substances Act, 1908, Sec. 4(1) of Prevention of Damages to Public Properties Act, 1984 and Sec. 150 of Railways Act, 1989 என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்சி தடா சிறப்பு நீதிமன்றத்தில் (CC No.45/1995) வழக்கு விசாரணை முடிந்து 2012ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை பெற்று வருகிறார்.