கடலூரில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காத பெண் அடித்துக் கொலை என அண்ணாமலை சொன்ன பொய்.. உண்மை அறியாமல் தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
பரவிய செய்தி
கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை – தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண், திமுக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.
கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 21, 2024
மேலும் இதனை தினமலர், பாலிமர் செய்திகள், நக்கீரன் போன்ற ஊடகங்களும் தங்களது பக்கங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளனர். தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில், “பானைக்கு ஓட்டு போடவில்லை என்பதால் பெண் உயிரை பறித்த திமுக கும்பல்” என்றும், ‘பாலிமர் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், “ஓட்டுப்போட்ட பெண்ணிடம் கிண்டல்.. தட்டிக்கேட்ட பெண் அடித்தேகொலை.. கொலையில் முடிந்த முன்விரோதம்” என்று குறிப்பிட்டும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை#cuddalore #Incident #Nakkheeran #electionupdate2024https://t.co/d10ic8bO24
— Nakkheeran (@nakkheeranweb) April 20, 2024
மேலும் பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பதிவிட்டும் இதே செய்தியை தங்களது சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்துள்ளதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து தமிழ்நாடு காவல்துறை “தவறான செய்தியை பரப்ப வேண்டாம். கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
Don’t spread false news. Stern legal action follows @MrSinha_ https://t.co/5bTSQLYR03
— Tamil Nadu Police (@tnpoliceoffl) April 21, 2024
மேலும் இது குறித்து கடலூர் மாவட்ட காவல்த்துறை தனது எக்ஸ் பக்கத்தில், ஏப்ரல் 21 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, PS Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர். 1. கலைமணி 2 தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5, அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்” என்றும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இதன் மூலம் கலைமணி என்பவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் செய்யுமாறு இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது கோமதி என்ற பெண் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு இறந்ததை அறிய முடிகிறது. ஆனால் இந்த செய்தியை கோமதி என்ற பெண், பாஜகவிற்கு ஓட்டு போட்டதன் காரணமாகவே திமுக கட்சியினரால் அடித்து கொலை செய்யப்பட்டதாகக் கூறி அண்ணாமலை உட்பட ஊடகங்கள் பலவும் தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ள வீடியோவின் 1:20 வது நிமிடத்தில், “தாமரைக்கு போட போனாங்க சார். இவங்க போட போனது இரட்டை இலைக்கு, அவங்க போட போனது சூரியனுக்கு சார்” என்று அந்த ஊர் பெண்கள், இறந்த கோமதி என்ற பெண் ஓட்டு போட சென்றது குறித்து, அனைத்துக் கட்சிகளின் பெயரையும் மாற்றி மாற்றிக் கூறுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
மேலும் படிக்க: அங்கப்பா வாக்குச்சாவடியில் 830 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை சொன்ன பொய்!
மேலும் படிக்க: ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த அண்ணாமலை எனப் பரவும் பழைய வீடியோ!
முடிவு:
நம் தேடலில், கடலூரில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காத பெண் அடித்துக் கொலை என்று கூறி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.