This article is from Apr 16, 2022

தலித் மக்களுக்கான சலுகை குறித்து இளையராஜா விமர்சித்ததாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

சலுகை என்பது ஏழைகளின் உரிமைகள் அதை ஏன் தாழ்த்தபட்டவன் என்ற போர்வையில் தலித்களுக்கேச் வழங்க வேண்டும்? எல்லா சாதியிலும் தானே ஏழைகள் உள்ளனர். தலீத் என்று இலவச சலுகைகள் தருவதால் தான் அச்சமூக இளைஞர்கள் கஷ்டங்கள் தெரியாமல் சமூகத்திற்கு கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் – இளையராஜா

 

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இசைஞானி இளையராஜா, அனைத்து சாதியிலும் ஏழைகள் இருப்பதாகவும், ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே சலுகை வழங்குவதாக கருத்து ஒன்றைக் கூறி உள்ளதாக அவரின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் இப்பதிவு வைரலாகி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இளையராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சட்டமேதை அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் இளையராஜா ஒப்பிட்டதால், அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களும், ஆதரவு கருத்துகளும சமூக வலைதளங்களில் உருவாகி உள்ளது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பாக பரவிய பதிவை தற்போது மீண்டும் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

இளையராஜா அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி சமீபத்திலோ அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பாகவோ இப்படியொரு கருத்தைக் கூறியதாக எந்த தகவலும் இல்லை, எந்த செய்திகளும் இல்லை.

4 ஆண்டுகளுக்கு முன்பாக இளையராஜா பற்றிய பரபரப்பு செய்திகள் ஏதும் வெளியாகியதாக எனத் தேடுகையில், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தலித் என்பதால் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்குவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மன்னிப்பும் கேட்டு செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, இளையராஜா தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. ஆனால், அது வதந்தி. அவர் அப்படி எங்கும் கூறவில்லை என இளையராஜாவின் வழக்கறிஞர் 2019 மே மாதம் தி நியூஸ் மினிட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், சலுகை என்பது ஏழைகளின் உரிமைகள் அதை ஏன் தாழ்த்தபட்டவன் என்ற போர்வையில் தலித்களுக்கேச் வழங்க வேண்டும்? எல்லா சாதியிலும் தானே ஏழைகள் உள்ளனர். தலீத் என்று இலவச சலுகைகள் தருவதால் தான் அச்சமூக இளைஞர்கள் கஷ்டங்கள் தெரியாமல் சமூகத்திற்கு கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என இளையராஜா பேசியதாக பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader