தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.385 கோடி இலக்கு நிர்ணயித்ததாகப் பரவும் 2019ம் ஆண்டு செய்தி !
பரவிய செய்தி
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் : ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு. 15 நாட்களுக்கான சரக்குகள் முன்கூட்டியே இருப்பு வைக்க அறிவுறுத்தல்.
மதிப்பீடு
விளக்கம்
தீபாவளி பண்டிகை வரவிருப்பதையொட்டி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.385 கோடியை விற்பனை இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும், 15 நாட்களுக்கான சரக்கினை முன்கூட்டியே இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்தித்தாள் புகைப்படம் ஒன்று வலதுசாரி மற்றும் பாஜக-வினரால் திமுக கனிமொழி அவர்களை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி குறித்துத் தேடியதில், அது 2019ம் ஆண்டு வெளியான செய்தி என்பதை அறிய முடிந்தது.
பரவக் கூடிய செய்தித் தாளில் ‘தினத்தந்தி’ என்றுள்ளது. ஆனால், எந்த தேதியில் வெளியான செய்தி என அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே அத்தலைப்பினை கொண்டு தேடியதில், ‘தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு’ என ‘மாலை மலரில்’ 2019 அக்டோபர் 21ம் தேதி செய்தி கிடைத்தது.
அதே தேதியில் இது குறித்து ’கலைஞர் செய்திகள்’ இணையதளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. அக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டினை எடப்பாடி பழனிசாமி (அதிமுக) ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் தீபாவளியின்போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ’தந்தி டிவி’ ஒரு செய்தி வெளியிட்டது. அப்படி எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என அப்போதைய மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் பதில் அளித்திருந்தார்.
அன்பான @thanthitv , எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை.. தவறான செய்திகளை பதிவிட வேண்டாமே.. நன்றி.. https://t.co/6JZjpDz0vT
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 16, 2022
இவற்றில் இருந்து தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.385 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருக்கிறதா ?
இதற்கு முன்னதாக டாஸ்மாக்குடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பிராந்தியை எப்படி குடிப்பது என பயிற்சி அளிப்பதாகத் தவறாகப் பரவும் 2012ம் ஆண்டு செய்தி !
முடிவு :
நம் தேடலில், தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி தற்போதைய கிடையாது. அது 2019ம் ஆண்டு வெளியான செய்தி என்பதை அறிய முடிகிறது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.