டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கூடிய கூட்டம் என காயத்ரி ரகுராம் பகிர்ந்த உ.பி பஜனை கூட்டம் வீடியோ !
பரவிய செய்தி
60% விவசாயிகள் மோடி அமைதியாக இருப்பதாலும், அவர்களை அவமரியாதை செய்வதாலும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவின் முக்கிய பிரச்சனையை அவர் புறக்கணிக்கிறார். டெல்லி எல்லையில் மொபைல் டவர்கள் முடக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அரசு 2020ல் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக அச்சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு விவசாயிகளிடம் வழங்கியுள்ளது. அவை நிறைவேற்றப்படாததால், தற்போது மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் டெல்லியினுள் நுழைவதைத் தடுக்க காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினரைப் பயன்படுத்தி பாதையில் முள் வேலி அமைப்பது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவது எனப் பல நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது.
மோடிக்கேதிரான விவசாயிகள் போரட்டம் … pic.twitter.com/6odf7xhXge
— Gowri Sankar D (@GowriSankarD_) February 15, 2024
இந்நிலையில் டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகளின் போராட்ட வீடியோ என நடிகையும் அதிமுக-வை சேர்ந்தவருமான காயத்திரி ரகுராம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதே வீடியோவை ‘மோடிக்கேதிரான விவசாயிகள் போரட்டம்’ எனப் பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
காயத்திரி ரகுராம் தனது பதிவில் டெல்லி எல்லையில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி ஹரியானா எல்லையில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் வீடியோ பற்றி அறிவதற்காக வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். பரவக் கூடிய வீடியோவில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அதே இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ’Traveller Sachin’ என்னும் யூடியூப் பக்கத்தில் 2023, பிப்ரவரி 8ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
அதன் தலைப்பில் ‘நாராயண் சாகர் ஹரி பஜனை, துண்டலா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துண்டலா என்ற இடம் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
இப்பெயரைக் கொண்டு மேற்கொண்டு தேடியதில், அந்த பஜனைக்குச் செய்யப்பட்ட முன்னேற்பாடு வீடியோவை ஒன்றையும் வேறொரு யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது. இந்தியில் உள்ள அந்த தலைப்பினை கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழி பெயர்த்ததில், அதிலும் ‘நாராயண் சாகர் ஹரி பஜனை’ என்றிருப்பதைக் அறிய முடிந்தது.
பரவக் கூடிய வீடியோவில் ‘Roofon cement’ என்கிற விளம்பரம் உள்ளது. இதே விளம்பரம் நாராயண் சாகர் ஹரி பஜனைக்கான முன்னேற்பாடு வீடியோவிலும் உள்ளது.
2023ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நாராயண் சாகர் ஹரி பஜனைக்குக் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவைத்தான் டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ரேஞ்ச் ரோவர் காரில் கலந்து கொண்ட விவசாயி எனப் பரவும் பொய் !
விவசாயிகள் போராட்டம் தொடர்பாகப் பரப்பப்பட்ட பொய் செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் ஏற்றி காவல் அதிகாரி கொல்லப்பட்டதாகப் பரவும் பொய்!
முடிவு :
டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் எனக் காயத்திரி ரகுராம் பதிவிட்ட வீடியோ தவறானது. அது 2023ல் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நாராயண் சாகர் ஹரி பஜனை நிகழ்ச்சிக்கு எடுக்கப்பட்ட வீடியோ.