டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மது வழங்கப்படுவதாகப் பரப்பப்படும் பொய்!
பரவிய செய்தி
ஏ சாராயத்தை ஊத்து போராட்டத்தை நடத்து. Farmers Protest …. The Truth ..
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அரசு 2020, செப்டம்பர் மாதம் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக அச்சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது.
அப்போது சில வாக்குறுதிகளை அரசு தரப்பு விவசாயிகளுக்கு அளித்தது. அவை நிறைவேற்றப்படாததால் மீண்டும் தற்போது விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளைத் தடுக்க அரசு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது.
ஏ சாராயத்தை ஊத்து போராட்டத்தை நடத்து
Farmers Protest …. The Truth .. #FakeFarmersProtest#DemocracyUnderAttack#FarmersProtest #FarmersProtest2024 pic.twitter.com/zNPLLVc17p
— Johny Bhai (@Johni_raja) February 17, 2024
இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பேரல் பேரலாக மது விநியோகிக்கப்படுகிறது என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
On Camera – Emotional Blackmail that we are “Anndata”
Behind Cameras REALITY- Enjoying ALCOHOL Daru Langars at “Protest” #FarmerProtest2024 #FarmersProtest pic.twitter.com/sZLslJKLL2
— Rosy (@rose_k01) February 16, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அதே வீடியோ ’AB Vlogs’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் 2021, செப்டம்பர் 13ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘Daaru bhandara’ என இருப்பதைக் கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் மொழிபெயர்த்ததில் மது விருந்து/பிரசாதம் என இருப்பதை அறிய முடிந்தது.
மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில் இதேபோன்று பேரல்களில் மது ஊற்றி பொது வெளியில் பலருக்கும் விநியோகிக்கும் வீடியோ 2021, செப்டம்பர் 7ம் தேதி ‘Devansh North’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அத்தலைப்பை மொழிபெயர்த்ததில் ‘Baba Rodu sha Mela, Kaunke Kalan village’ என்றிருப்பதை அறிய முடிந்தது.
Kaunke Kalan கிராமம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளது. அக்கிராம மக்கள் பல ஆண்டுகளாகப் பாபா ரோடு ஷாவுக்கு மது படைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு படைக்கப்பட்ட மதுவை தாங்களும் பிரசாதமாக அருந்துகின்றனர்.
தற்போது பரவக் கூடிய வீடியோவில் நீல நிற டர்பன் அணிந்த இளைஞர் இருப்பதைக் காண முடிகிறது. இதே நபர் Devansh North யூடியூபில் உள்ள வீடியோவிலும் உள்ளார். அவரது டர்பன் மற்றும் அவரது டி-ஷர்ட்டில் உள்ள கோடுகளைக் கொண்டு இதனை உறுதி செய்ய முடிகிறது. இவற்றிலிருந்து பாபா ரோடு ஷா விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவைத்தான் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
இந்த பொய் செய்தியைப் பரப்பிய ஜானி பாய் என்பவர் இதேபோன்று வேறொரு மது தொடர்பான வீடியோவையும் டெல்லி விவசாயிகள் போராட்டம் எனப் பொய் செய்தி பரப்பியுள்ளார். அந்த வீடியோவிற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என முன்னரே யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் இலவசமாக மது விநியோகம் எனப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு :
டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் போராட்டத்தில் பேரல் பேரலாக மது வழங்கப்படுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது லூதியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழா சடங்கின் போது எடுக்கப்பட்டது.