டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதியா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மீடியான் எனும் வலதுசாரி ஆதரவு இணையதள பக்கத்தில், ” விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கலந்து கொண்ட பகீர் தகவல் ” என ஒருவர் டர்பன் அணிந்து இருக்கும் புகைப்படத்துடன் கூடியச் செய்தியை வெளியாகி இருக்கிறது. அதற்கு அடிப்படை ஆதாரமாக சடகோபன் நாராயணன் என்பவரின் முகநூல் பதிவை இணைத்து உள்ளார்கள்.
சடகோபன் நாராயணன் முகநூல் பதிவில், ” விவசாயிகள் போர்வையில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் நஸீர் முகமத் திடீரென நவதீப் மோகன் புரியா ஆகிவிட்டார். இது தேச விரோதிகளின் போராட்டம். காலிஸ்தான் போராளிகள், ப்ரோக்கர் யோகேந்திர யாதவ் போன்ற சுயநல வாதிகள், நக்ஸல்கள், சிஏஏ எதிர்ப்பாளர்கள் உதவியுடன் நடைபெறும் மற்றுமொரு நாடகம். மோடியை எதிர்த்து அரசியல் ரீதியாக நிற்க முடியாதவர்கள் விவசாயிகள் பெயரில் போராட்டம் செய்கின்றனர் ” எனக் கூறி நஸீர் முகமத் என்பவரின் முகநூல் பக்க ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் அவரின் மற்றொரு புகைப்படமும் வெளியிட்டு இருக்கிறார்.
பிற முகநூல் பக்கங்களிலும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி எனநஸீர் முகமத் முகநூல் பக்க ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் புகைப்படம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி பரப்பப்படும் புகைப்படங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
நஸீர் முகமத் என்பவரின் முகநூல் பக்கத்தை தேடிப் பார்க்கையில், அந்த முகநூல் பக்கம் உண்மையாக இருந்தாலும், போராட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டதாக வைரல் செய்யப்படும் அவரின் புகைப்படம் ஏப்ரல் 8-ம் தேதியே முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆம், ஏப்ரல் 8-ம் தேதி நஸீர் முகமத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் டெல்லி விவசாயிகள் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது அல்ல.
கடந்த ஜூன் மாதம் வேளாண் சட்டத் திருத்தம் கொண்ட மூன்று மசோதாவை மத்திய அரசாங்கம் வெளியிட்டது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வைரலாகும் புகைப்படம் நஸீர் முகமத் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் வேளாண் மசோதா சட்டமாக்கப்பட்டது. தற்போது விவசாயிகள் போராட்டம் டெல்லியை நோக்கி நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கையில், நஸீர் முகமத் முகநூல் பக்கம் மற்றும் அவரின் புகைப்படத்தைப் தவறாகப் பயன்படுத்தி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். மேலும், பிற மொழிகளில் முஸ்லீம்கள் சீக்கியர்கள் போல மாறுவேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதாக இதே புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்த வந்த இஸ்லாமியர் என வதந்தி வீடியோ !
இதேபோல், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து வந்த இஸ்லாமியர் என பஞ்சாப் சீக்கியரை போலீசார் அழைத்து செல்லும் பழைய வீடியோவை திட்டமிட்டு தவறாகப் பரப்பி உள்ளார்கள்.
முடிவு :
நம் தேடலில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதி என வைரல் செய்யப்படும் நஸீர் முகமத் என்பவற்றின் புகைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது. மேலும், அவர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா இல்லையா என்ற ஆதாரங்கள் இல்லாமல் பழைய புகைப்படங்களை தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.