விவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் ஏற்றி காவல் அதிகாரி கொல்லப்பட்டதாகப் பரவும் பொய்!
பரவிய செய்தி
விவசாயிகள் என்ற போர்வையில் உலா வரும் பிரோகர்கள் தங்கள் டிராக்டரின் கீழ் ஒரு போலீஸ் அதிகாரியை நசுக்கினர். அப்பாவை இழந்து, மகனை இழந்து, கணவனை இழந்த அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டபடும்.
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அரசு 2020, செப்டம்பர் மாதம் மூன்று வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்திலோ விவசாயிகளிடமோ கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகக் சட்டமாக கொண்டுவந்தது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராகவும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக அச்சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது என சில வாக்குறுதிகள் அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. அவை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் தற்போது விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தடுக்கும் வகையில் அரசும் காவல்துறையும் விவசாயிகள் வரும் பாதையில் முள் வேலி அமைப்பது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவது எனப் பல செயல்களில் ஈடுபட்டுள்ளது.
அடபாவிகளா , விவசாயிகள் என்ற போர்வையில் உலா வரும் பிரோகர்கள் தங்கள் டிராக்டரின் கீழ் ஒரு போலீஸ் அதிகாரியை நசுக்கினர்.
அப்பாவை இழந்து, மகனை இழந்து, கணவனை இழந்த அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டபடும்.
இவனுங்க நல்லாயிருக்க மாட்டானுங்க.— Devi Uvacha|உவாச| उवाच (@Devi_Uvacha) February 13, 2024
இந்நிலையில் விவசாயிகள் தங்களின் டிராக்டரை ஏற்றிக் காவல் துறை அதிகாரியை நசுக்கிக் கொன்றதாக வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களைக் கொண்டும், முக்கிய வார்த்தைகளைக் கொண்டும் இணையத்தில் தேடினோம். ’டைம்ஸ் நவ்’ இணைய தளத்தில் இந்த வீடியோ தொடர்பாக 2023, ஆகஸ்டு 21ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பஞ்சாப் மாநிலம் சங்ரூர் (Sangrur) அருகேயுள்ள பாட்பார் (Badbar) சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்ட போது அதனை மீறிச் செல்ல போராட்டக்காரர்கள் வேகமாக டிராக்கரை இயக்கியுள்ளனர்.
அப்போது விவசாயி ஒருவர் டிராக்டரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் காவல் துறை அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதே தகவல் ’இந்தியா டுடே’ தளத்திலும் செய்தியாக வெளியாகியுள்ளது. மேலும் தற்போது பரவக் கூடிய வீடியோவை சங்ரூர் காவல்துறையும் அவர்களது எக்ஸ் தளத்தில் 2023, ஆகஸ்ட் 21ம் தேதி பதிவிட்டு உள்ளது. அவர்களும் இறந்தது விவசாயி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
Reg unfortunate death of a protester today at Longowal,it is clarified that as per witnesses & videos d deceased was overrun by a rashly driven tractor trolley by protesters,which also severely injured a police inspector who narrowly escaped from getting crushed.Our condolences pic.twitter.com/iKuYGG4ENN
— Sangrur Police (@SangrurPolice) August 21, 2023
இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோ தற்போது டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்பில்லை என்பதையும் அதில் இறந்தவர் காவல்துறை அதிகாரி அல்ல, விவசாயி என்பதும் உறுதி செய்ய முடிகிறது.
வயதானவர் பேசும் வீடியோ :
இதேபோல், டெல்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து பெண்மணி ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசியதாக வேறொரு வீடியோவும் பரப்பப்படுகிறது.
அப்பதிவில், “பஞ்சாப் பொதுமக்களை பிரதிபலிக்கும் இந்த அம்மாவுக்கு பாராட்டுங்கள். பஞ்சாபில் சில விவசாயிகள் அமைப்பு காலிஸ்தானியர்களுடன் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு முக்கிய சாலைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் எந்த அரசாங்கமும் தைரியமாக அதுவும் விவசாயிகள் போர்வையில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யோசிப்பார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் பெரிய நெருக்கடி கொடுக்கவே இந்த சதி திட்டம்” என்றுள்ளது.
அந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இந்த வீடியோ தொடர்பாக 2022, நவம்பர் 5ம் தேதியே ‘Focus Punjab Te’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருந்து பரவக் கூடிய வீடியோவிற்கும் தற்போது விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுப்பதற்கும் தொடர்பில்லை என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை அதிகாரி மீது டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது 2023, ஆகஸ்ட் மாதம் பஞ்சாபில் நடந்த விவசாயிகள் போராட்டம். அந்த விபத்தில் விவசாயிதான் இறந்துள்ளார்.
இதேபோல், வயதான பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து பேசியதாகப் பரவும் வீடியோ கடந்த 2022ல் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.