டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ரேஞ்ச் ரோவர் காரில் கலந்து கொண்ட விவசாயி எனப் பரவும் பொய் !
பரவிய செய்தி
மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது 4 கோடி ரூபாய் மதிப்புமிக்க ரேஞ்சி ரோவர் காரில் வந்து இறங்கிய எழை விவசாயி. விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று அப்போது போராடினார்கள் கடைசியில் திரும்பவும் பெற்றார்கள்.. இப்போது அந்த விவசாய சட்டங்களில் சொல்லியிருந்த சில திட்டங்களை கொண்டு வாருங்கள் என்கிறார்கள் .
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அரசு 2020ம் ஆண்டு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக அச்சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது என சில வாக்குறுதிகள் அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. அவை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் தற்போது விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
I have 2 acres land … tell me what crop should I grow to buy a Range Rover like this poor farmer ? #FakeFarmersProtest2Point0 pic.twitter.com/aqASRaSDnb
— S.Karunanidhi S/O Jayakada (@shivprasath) February 14, 2024
தற்போது நடைபெறும் அப்போராட்டத்திற்கு விவசாயி ஒருவர் தனது 4 கோடி ரூபாய் மதிப்புமிக்க ரேஞ்ச் ரோவர் காரில் வந்ததாக, ரேஞ்ச் ரோவர் காரில் விவசாயி சங்க கொடி கட்டப்பட்ட புகைப்படம் ஒன்று பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அது விலையுயர்ந்த ஆடம்பர கார்களை வாடகைக்கு அளிக்கும் நிறுவனம் ஒன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களின் கார்களில் கொடி கட்டியதை அறிய முடிந்தது.
பஞ்சாபைச் சேர்ந்த ‘AK Luxury Car Rentals’ என்னும் நிறுவனம் விலையுயர்ந்த கார்களை வாடகைக்கு விடுகிறது. இதற்கு முன்னர் விவசாயிகளின் போராட்டத்தின்போது தங்களிடம் உள்ள விலையுயர்ந்த காரில் விவசாயச் சங்கங்களின் கொடிகளைக் கட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது பரவக் கூடிய ரேஞ்சி ரோவர் கார் புகைப்படம் 2021, ஜனவரி 26ம் தேதி AK Luxury Car Rentals தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளது. அதில், ’Support farmers’ (விவசாயிகளுக்கு ஆதரவு) எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் வேறு கார்களிலும் விவசாயச் சங்க கொடிகள் கட்டப்பட்ட புகைப்படங்களையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் 2021ம் ஆண்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த படத்தை, தற்போது போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயின் கார் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் ஏற்றி காவல் அதிகாரி கொல்லப்பட்டதாகப் பரவும் பொய்!
இதேபோல் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் வைரலாகும் கார் மதிப்பு ரூ.2 கோடியா ?
முடிவு :
நம் தேடலில், டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்குத் தனது 4 கோடி ரூபாய் மதிப்புமிக்க ரேஞ்ச் ரோவர் காரில் வந்த விவசாயி எனப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2021ம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஆதரவு தெரிவித்து தங்களின் கார்களில் விவசாய சங்க கொடிகளைக் கட்டிய போது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிகிறது.