தருமபுரம் ஆதீனம் வழங்கிய இலவச மருத்துவமனை கட்டடத்தை நகராட்சி இடிக்கப்போவதாக பரவிய வதந்தி !

பரவிய செய்தி
சாகும் வரை உண்ணாவிரதம்: ஆதினம் அறிவிப்பு! தருமபுரம் ஆதினம் 24வது குருமணிகள் தம் தாயார் நினைவாக அமைத்த இலவச மருத்துவமனை கட்டடத்தை இடிக்கப்போவதாக தகவல்: முன்னோர் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தும் காப்போம்: தருமபுரம் ஆதினம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள் அறிவிப்பு.
மதிப்பீடு
விளக்கம்
தருமபுரம் ஆதினம் 24வது குருமணிகள் தனது தாயாரின் நினைவாக அமைத்த இலவச மருத்துவமனை கட்டிடத்தை மயிலாடுதுறை நகராட்சி இடிக்க உள்ளதாகவும், இதனை எதிர்த்து தருமபுரம் ஆதீனம் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளதாகவும் தினமலர் நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க, ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு, 1951- ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தருமபுரம் ஆதீனம் சார்பாக, பல ஆண்டுகளாக, பலருக்கும்…
— K.Annamalai (@annamalai_k) October 6, 2023
இதே தகவலை பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்கு கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காத நிலையில், தற்போது நகராட்சி, அந்தக் கட்டிடத்தை இடிக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பாஜகவினர் பலரும் தங்களின் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
சனாதன ஒழிப்பு திமுக அரசு தருமபுர ஆதினத்தால் கட்டபட்ட மருத்துவமனையை அரசியல் காரணங்களுக்காக இடிக்க முடிவெடுத்துள்ளது.
பாரத பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழர்களின் அடையாளமான செங்கோல் நிறுவியவர் தருமபுர… pic.twitter.com/XmZGA4ccI6
— Selva Kumar (@Selvakumar_IN) October 6, 2023
உண்மை என்ன ?
மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நகராட்சிக்குச் சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இது தருமபுரம் ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் என்பவர் முன்னெடுப்பில் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் 1951ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி ராஜாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாகத்தான் தினமலர் மற்றும் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து தருமபுரம் ஆதீனம் அவர்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “தருமையாதீன 24ஆவது குருமணிகள் தம் தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை கவர்னரால் தொடங்கப்பெற்று 25ஆவது குருமணிகள் காலத்தில் மாநில முதல்வர் மாண்புமிகு குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது இதில் ஜெர்மனிய மருத்துவர் பல்லாண்டுகாலம் இருந்து பலருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பெற்றது. இதை நாம் ஆதீன பராமரிப்பில் நடத்த நகராட்சிக்கு எழுதியும் பதில்வராத பொழுதே அதை இடிக்கபோவதாக செய்தி வந்து கொண்டுள்ளது. அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் நம்முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் உண்ணாவிரதம் இருந்து காப்போம்” என்றுள்ளது.
இடிக்கப்போவதாகச் செய்தி வந்துள்ளது என அப்பதிவில் உள்ளது. ஆனால், அந்த செய்தியைத் தெரிவித்தது யார் என எந்த தகவலும் கூறவில்லை. மேலும், அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம் என்றுதான் ஆதீனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தினமலர் தனது நியூஸ் கார்டில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது போல ‘சாகும் வரை உண்ணாவிரதம்: ஆதீனம் அறிவிப்பு’ எனத் தவறாகத் தலைப்பிட்டுள்ளது.
மேற்கொண்டு இது குறித்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையரை யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் தொடர்பு கொண்டு பேசியபோது, “தருமபுரம் அதீனம் இலவச மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் எந்த திட்டமும் இல்லை. அப்படி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அக்கட்டிடம் பழைய மற்றும் பயனற்று இருப்பதால், சிலர் அத்துமீறிப் பயன்படுத்துகிறார்கள். அவர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளோம்” என்று விளக்கமளித்தார்.
அதுமட்டுமின்றி அக்கட்டிடத்தில் தற்போது மருத்துவமனை இயங்கவில்லை. அங்கு இயங்கிய வந்த ஆரம்பச் சுகாதார மையம், அருகில் அரசு கட்டடம் கட்டப்பட்டதால் அங்கு மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதீனத்தால் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை அரசு இடிக்கப்போவதாகத் தவறான தகவல் சமூகவலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, ‘அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் சாகும் உண்ணாவிரதம் இருந்து காப்போம்’ என்று ஆதீனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனைத் திரித்து உண்ணாவிரதம் அறிவித்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தவறான தகவல் அடிப்படையில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவுகளை தருமபுரம் ஆதீனம் பக்கத்தில் தொடர்ச்சியாக பகிர்ந்து உள்ளனர். அந்த பதிவுகள் தற்போது நீக்கக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இந்துக்கள் வழிபாடு நடத்தத் திமுக அரசு தடை விதித்தது எனப் பொய் சொன்ன பாஜக எம்.பி. !
இதற்கு முன்னர் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி ANI-க்கு அளித்த நேர்காணலில் தமிழ்நாடு குறித்து தவறான தகவலைப் பேசியிருந்தார். அது குறித்த உண்மையினையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
தருமபுரம் ஆதீனத்தால் கட்டப்பட்ட இலவச மருத்துவமனையை மயிலாடுதுறை நகராட்சி இடிக்கப்போவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.