விவசாயிகள் போராட்டத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் பழைய புகைப்படம்!

பரவிய செய்தி

எல்லோருக்கும் உன்னை ஏன் பிடிக்குதுனு தெரியுமா..?? இராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் செல்லவில்லை. கடும் நெருக்கடியிலும் தவிர்த்தார். விவசாயிகள் போராட்டத்தில் தாமாகவே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

விவசாயிகளின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற்றது. அப்போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததால் அவர்கள் மீண்டும் கடந்த பிப்ரவரி 13ம் தேதி டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்றனர். காவல் துறையும் துணை ராணுவத்தினரும் இணைந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கையாண்டனர். 

இதில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் ஹரியானா காவல் துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளம் விவசாயி சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைப் பிப்ரவரி 29ம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ச் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அப்படத்தை 2022 ஜூலை 17ம் தேதி ‘குர்பிரீத் சிங் ஆனந்த்’ (Gurpreet Singh Anand) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது. பரவக் கூடிய படத்தில் தோனியுடன் இருப்பவர் இவர்தான்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’Khalsa Jatha British Isles’ நிர்வாக தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கிய வழிபாட்டுத்தளமான இவ்விடம் லண்டனில் உள்ளது. 

மேற்கொண்டு தேடியதில் குர்பிரீத் சிங் ஆனந்தின் எக்ஸ் பக்கத்தில் 2022, அக்டோபரில் பதிவிட்ட வேறொரு புகைப்படமும் கிடைத்தது. அதில் பரவக் கூடிய படத்தில் உள்ள அதே உடையை தோனி மற்றும் குர்பிரீத் சிங் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. அப்பதிவில், ’சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள குருத்வாரா கல்சா ஜாதாவில் நான் M.S.தோனியை சந்தித்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

தோனி 2022, ஜூலை 17 அன்று லண்டலின் இருந்தது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேற்கண்ட தகவல்களிலிருந்து பரவக் கூடிய படத்திற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

முடிவு : 

மகேந்திர சிங் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2022ம் ஆண்டு லண்டன் குருத்துவாராவில் எடுக்கப்பட்டது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader