This article is from Jul 12, 2019

தோனி ரன் அவுட் ஆகியதற்கு புகைப்பட கலைஞர் கண்ணீர் விடுகிறாரா ?

பரவிய செய்தி

சொல்ல வார்த்தைகள் இல்லை.. பேசும் படும்..

மதிப்பீடு

விளக்கம்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறும் பொழுது அங்கிருந்த புகைப்படக் கலைஞர் கண்ணீர் விடுவதாக சில புகைப்படங்களின் தொகுப்புகள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

தற்சமயம் அதே பதிவுகள் தமிழில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அளவில் வைரலாகிய புகைப்படங்கள் குறித்து தேடுகையில், 2019 ஜனவரி 24-ம் தேதி Asiancup உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் இப்படமானது இடம்பெற்று இருக்கிறது.


” 2019 ஜனவரியில் நடைபெற்ற asiancup கால்பந்து போட்டியில் கத்தார் மற்றும் ஈராக் இடையேயான போட்டியில் கத்தார் அணி 1-0 என்ற கணக்கில் ஈராக் அணியை வென்றது. இதனைக் கண்டு புகைப்பட கலைஞர் கண்ணீர் விட்டு அழுது உள்ளார் ”


ஈராக் விளையாட்டு போட்டிகளின் புகைப்படக் கலைஞர் முகமத் அல் அசாமி கண்ணீருடன் தன் பணியை முடித்தார் என ஸ்டீவன் நபில் என்பவர் ஜனவரி 24, 2019-ல் தன் ட்விட்டர் பக்கத்தில் முகமத் அல் அசாமி உடைய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

முகமத் அல் அசாமி உடைய பிற புகைப்படங்களில் அவரின் சட்டையில் ஈராக் நாட்டின் கொடி இருப்பதையும் காண முடிகிறது. இப்படங்களை ஸ்டீபன் நபில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு :

ஆசிய கால்பந்து போட்டியில் கத்தார் அணியுடன் ஈராக் தோல்வி அடைந்த பொழுது ஈராக் நாட்டின் புகைப்படக் கலைஞர் கண்ணீர் விடும் புகைப்படங்களை உலகக்கோப்பை போட்டியில் தோனி அவுட் ஆகிய பொழுது நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader