ஃபேஸ்புக் வதந்தியை செய்தியாக வெளியிட்ட தினமலர் !
பரவிய செய்தி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்த போது, பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை, கண்டறிந்தனர், ‘நாசா’ விஞ்ஞானிகள்.
மதிப்பீடு
விளக்கம்
பிரபல தமிழ் செய்தித்தாளான தினமலரின் இணையதளத்தில் வாரமலர் பிரிவில் “ நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்! “ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்த பொழுது பல அற்புதங்கள் நிறைந்து இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதை முன்பே பார்த்து இருப்பது போன்று தோன்றும் அல்லாவா ! ஆம், சில தினங்களுக்கு முன்பு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வைரலானப் பதிவை தினமலர் செய்தித்தளத்தில் தற்பொழுது வெளியிட்டு உள்ளனர்.
விரிவாக படிக்க : #நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?
ஜூன் 2-ம் தேதி youturn இணைய தளத்தில் இச்செய்திகளில் உண்மை இல்லை, நையாண்டித்தனமாக ஒருவர் முகநூலில் பதிவிட்ட பதிவை வைரலாக்கி இருந்தனர் என ஆதாரங்களுடன் வெளியிட்டு இருந்தோம். இந்த பதிவை முதலில் மே 31-ம் தேதி நகைச்சுவை நடிகரான வெங்கடேஷ் ஆறுமுகம் தன் முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஜெர்மன் விஞ்ஞானி கெப்ளர் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. உண்மைத்தன்மை இல்லாத செய்தி என நாம் முன்பே வெளியிட்டதை தற்பொழுது பிரபல செய்தித்தளத்தில் ” நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்!” என்ற தலைப்பில் வியப்புடன் வெளியிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க : திருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?
இன்னும் எத்தனை முறை தான் #நாசா_வியந்தது என்று ஆதாரமில்லாத தகவல்களை பகிர்வார்கள் எனத் தெரியவில்லை. திருநள்ளார், மீனாட்சி அம்மன் என கோவில்களை நாசாவுடன் இணைத்து தவறான செய்திகளை வெளியிடுகின்றனர்.
இப்படியான செய்திகளை பார்க்கும் மக்கள் உண்மை என நினைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி பார்க்கும் செய்திகளில் ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் மக்களே கேள்விகளை எழுப்ப முன்வர வேண்டும்.