காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் குறித்த செய்திக்குப் பழைய படத்தினை பயன்படுத்திய தினத்தந்தி !
பரவிய செய்தி
இஸ்ரேல் ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா மருத்துவமனைகள்..! மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவிப்பு..!
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 7ம் தேதி காசா (Gaza) என்னும் பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இஸ்ரேலியப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை காசா பகுதி மீது நிகழ்த்தியது. திங்கள் கிழமை இரவு முழுவதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் 900 பேர் இதுவரை இறந்துள்ளதாக காசா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
விரிவாக படிக்க—->https://t.co/CjRypCwaxs#Isreal #Palestine #IsraelPalestineConflict #Kaasa #Dailythanthi #NewsUpdate #DTnews #DT pic.twitter.com/XbWv5yQcG0
— DailyThanthi (@dinathanthi) October 10, 2023
இந்நிலையில் இது குறித்து ‘தினத் தந்தி’ நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ‘இஸ்ரேல் ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா மருத்துவமனைகள்..! மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவிப்பு..!’ என்றுள்ளது. மேலும் அந்த கார்டில் இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
தினத் தந்தி நியூஸ் கார்டில் உள்ள படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்ததில் அது 2021ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போன்ற படத்தைப் புகைப்பட விற்பனை தளமான ‘Getty images’ பதிவிடப்பட்டுள்ளது. 2021, மே 17ம் தேதி காசா நகர் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனையில் கதறி அழுகின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே புகைப்படம் ‘The Intercept’ என்னும் இணையதளத்தில் 2021, மே 21ம் தேதி வெளியான செய்தியில் உள்ளது. அதில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் சுகாதார கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 மே 19ம் தேதியன்று இத்தாக்குதல் குறித்து ‘Tribun news’ தளத்தில் வெளியான செய்தியிலும் இதே புகைப்படம் உள்ளது.
2021ம் ஆண்டு காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட படத்தினை தற்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றிய செய்திக்குத் தினத் தந்தி தவறாகப் பயன்படுத்தியுள்ளது.
முடிவு :
நம் தேடலில், காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து தினத் தந்தி வெளியிட்ட நியூஸ் கார்டில் பயன்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களில் படம் 2021, மே மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.