சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தனித்தனி தொகுதியென திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா ?
பரவிய செய்தி
ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் சீனிவாசன்
மதிப்பீடு
விளக்கம்
வாரிசு அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு குறுகிய காலத்திலேயே திமுகவில் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதோடு 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவர் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மகன் என்பதால் அவருக்கு சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி என இரு தொகுதிகளை ஒதுக்கி இருப்பதாக அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக மார்ச் 12- தேதி குறிப்பிட்ட புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஒரே தொகுதி என்றுக்கூட தெரியவில்லை என திமுக ஆதரவாளர்கள் பலரும் நியூஸ் கார்டை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும், அதை தனி பதிவாகவும் பகிர்ந்து பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உதயநிதிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறினாரா எனத் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை என அறிய முடிந்தது. புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்திலும் அப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகவில்லை.
பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டுபேசுகையில், ” இது போலியானது ” என பதில் அளித்து இருந்தனர். புதிய தலைமுறையில் மார்ச் 12-ம் தேதி வெளியான நியூஸ் கார்டில் இப்படி எடிட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : பாஜக தலைவர்களை சீமான் ரகசியமாக சந்தித்தாரா ?| உண்மை என்ன ?
முடிவு :
நம் தேடலில், ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் என அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக பரவும் செய்தி எடிட் செய்து பரப்பப்படும் போலிச் செய்தி என அறிய முடிகிறது.