தீபாவளிக்கு டாஸ்மாக் ரூ600 கோடி இலக்கு.. தவறானச் செய்தியை வெளியிட்டு நீக்கிய தந்தி டிவி.. பரப்பும் பாஜகவினர் !
பரவிய செய்தி
தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறதாம். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களை தொடர்ந்து திங்களன்று தீபாவளி வருவதால் இலக்கை அடைவது சுலபம்தான். இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாக இருப்பதை பார்த்தால் ரொம்ப பெருமையாக (!) இருக்கு. ” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்ப்புகள் ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் முடிந்த பிறகு வெளியாகும் செய்திகளில் டாஸ்மாக் கடைகளில் வசூலான தொகை முன்னணி செய்தியாக வெளியாகும் அளவிற்கு எல்லையைத் தொட்டு இருக்கும். அந்த அளவிற்கு டாஸ்மாக் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
எந்த கட்சி ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளின் வருமானம் பன்மடங்கு பெருக மட்டுமே செய்கிறது. டாஸ்மாக் மது கடைகளை மூட முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், அடுத்த வாரம் தீபாவளி வரவுள்ளதால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.600 கோடிக்கு டார்கெட் செய்யப்பட்டு உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் மற்றும் சில செய்தி தளங்களில் வெளியாகி வருகிறது.
” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 431 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சனிக்கிழமை ரூ.200 கோடியும், , ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடியும், தீபாவளியன்று ரூ.200 கோடியும் என ரூ.600 கோடி மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ” என மாலை மலர், குமுதம், ஒன் இந்தியா உள்ளிட்ட செய்தி இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
தீபாவளிக்கு ரூ.600 கோடி மது விற்க டாஸ்மாக் இலக்கு வைத்து இருப்பதாக அக்டோபர் 16ம் தேதி தந்தி டிவி செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
ஆனால், தந்தி டிவி செய்தி பரவிய உடன் அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ” அன்பான தந்தி டிவி, எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை.. தவறான செய்திகளை பதிவிட வேண்டாமே.. நன்றி.. ” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிவையடுத்து தந்தி டிவி வெளியிட்ட செய்தியை தனது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. ஆனால், பிற செய்தி ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் அந்த செய்தி இன்னும் நீக்கப்படவில்லை.
மேலும் படிக்க : “பள்ளி மீது தவறு இல்லை” என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாக செய்தி வெளியிட்டு நீக்கிய தந்தி டிவி!
மேலும் படிக்க : திமுக அமைச்சர் ரூ6.5 கோடிக்கு 1,154 சைக்கிள்கள் வழங்கியதாக தினத்தந்தி வெளியிட்ட தவறான செய்தி
இதற்கு முன்பாக, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு சம்பவத்தின் போதும், அரசின் விலையில்லாத சைக்கிள் வழங்கிய போதும் தந்தி டிவி தவறான செய்திகளை வெளியிட்டு நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. அப்படி எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததையடுத்து தந்தி டிவி வெளியிட்ட செய்தியை நீக்கி இருக்கிறது என அறிய முடிகிறது.