திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததாக பரப்பப்படும் வதந்தி !
பரவிய செய்தி
விடியலோ விடியல் சென்னையில் விடியல் ஆட்சியில தற்போது போடப்பட்ட மழைநீர் வடிகால் பணியின் அவலநிலை.
மதிப்பீடு
விளக்கம்
திமுக ஆட்சியில் சென்னையில் தற்போது போடப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால் ஒன்று இடிந்து உள்ளதாகக் கூறி, ஒருவர் நடந்து வரும் போது வடிகால் இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
*”விடியலோ விடியல்”*🙄 சென்னையில் விடியல் ஆட்சியில தற்போது போடப்பட்ட மழைநீர் வடிகால் பணியின் அவலநிலை..👆 pic.twitter.com/XQxlPyW86Y
— DURAI ADMK தோகமலை கிழக்கு ஒன்றியம் தகவல் தொழிநுட்ப (@DURAIDU78031144) August 2, 2022
உண்மை என்ன ?
சாலையோரமா உள்ள கடைக்கு ஒரு நபர் வரும் போது அங்கிருந்த கான்கிரீட் வடிகால் இடிந்து விழுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். ஒரு நொடி, ஒரு அடி தாமதித்து இருந்தாலும் அவரும் வடிகாலில் விழுந்து படுகாயமடைந்து இருப்பார். இந்த அதிர்ச்சி சிசிடிவி வீடியோ செய்திகளில் கூட வெளியாகி இருந்தது. ஆனால், தமிழகத்தில் நிகழ்ந்தாக எங்கும் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து தேடிய போது, ஜீ தெலுங்கு இணையதளத்தில் வைரல் வீடியோ குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது எனக் குறிப்பிடவில்லை. மேலும், டிவி 9 தெலுங்கு டிஜிட்டல் எனும் யூடியூப் சேனலும் இவ்வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.
மேற்கொண்டு தேடிய போது, ” ஆந்திராவில் இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் போது திடீரென இடிந்து விழுந்த கான்கிரீட்டால் ஷாக்கான அந்த இளைஞர் கொடுத்த ’ரியாக்ஷன்’இணையத்தில் வைரலாகி வருகிறது ” என பாலிமர் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேலும், சிசிடிவி வீடியோவில் கடை வாசலில் வைக்கப்பட்டு உள்ள பேனரில் தெலுங்கில், பொருட்கள் வாங்குவது தொடர்பாக எழுதப்பட்ட வாசகம் உள்ளதையும் பார்க்க முடிந்தது.
ஆந்திராவில் நிகழ்ந்ததாக செய்தியில் வெளியான வைரல் சிசிடிவி காட்சியை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், சென்னையில் திமுக ஆட்சியில தற்போது போடப்பட்ட மழைநீர் வடிகால் பணியின் அவலநிலை எனப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அது ஆந்திராவில் பதிவான நிகழ்வு என அறிய முடிகிறது.