திமுக ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் பெற்றதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
பரவிய செய்தி
ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன்.. அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் நடவடிக்கை) செயல்படுத்தாமல் இருக்க ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் திமுக 100 கோடி பணம் வாங்கியதாக ஸ்டெர்லைட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை திருமதி கனிமொழி அவர்கள் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது! – சன்நியூஸ்
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 2018 மே 22 அன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டத்தில் உயர் துறந்தவர்களுக்காக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் நடவடிக்கை) செயல்படுத்தாமல் இருக்க ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் திமுக 100 கோடி பணம் வாங்கியதாக ஸ்டெர்லைட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை திருமதி கனிமொழி அவர்கள் வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது” என்று கூறி சன்நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 2023 இல் இருந்து பரவி வரும் இந்த நியூஸ் கார்டை சிலர் நமது யூடரன் ஊடகத்திற்கு தெரியப்படுத்தி இதன் உண்மை தன்மையை சரிபார்க்குமாறு தற்போது கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதை ஒரு fact check பண்ணுங்க @youturn_inhttps://t.co/SRVtp8SaPD
— Dr. தீபக் (@nikaran_tn) May 22, 2024
It’s true @KanimozhiDMK @arivalayam @mkstalin @Udhaystalin https://t.co/D4vddY0F5b
— தமிழீழம் (@BairavaMpoff) May 24, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சன்நியூஸ் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில், இது குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் பரவி வரும் நியூஸ் கார்டில் 2023 மே 22 என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால், சன்நியூஸ் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில், 2023 மே 22 அன்று இது குறித்து ஏதாவது நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். ஆனால் “கழிவுநீர் மரணங்களை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!” என்ற தலைப்பிலேயே அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
#BREAKING | கழிவுநீர் மரணங்களை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!#SunNews | #TamilNadu | @mkstalin pic.twitter.com/JsjqQMOnAh
— Sun News (@sunnewstamil) May 22, 2023
எனவே “கழிவுநீர் மரணங்களை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து, சிலர் தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் எனப் பரவும் போலிச் செய்தி!
இதற்கு முன்பும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் அரசியல் தலைவர்கள் பலர் பணம் பெற்றதாகக் கூறி பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: வேதாந்தா குழுமத்திடம் இருந்து திமுக பணம் பெற்றதாக சீமான் சொன்ன பொய்!
முடிவு:
நம் தேடலில், திமுக ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் பெற்றதாகப் பரவும் சன்நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.