தமிழ்நாட்டில் இந்துக்கள் வழிபாடு நடத்தத் திமுக அரசு தடை விதித்தது எனப் பொய் சொன்ன பாஜக எம்.பி. !
பரவிய செய்தி
தமிழ்நாடு பெரம்பலூரிலுள்ள கொளத்தூரில் முஸ்லிம்கள் 70 சதவீதம் இருப்பதினால் இந்துக்கள் கோயிலில் வழிபாடு நடத்தக்கூடாது எனக் கோரிக்கையை முன் வைத்தனர். அதனை திமுக அரசும் ஏற்றுக்கொண்டது. சென்னை உயர்நீதிமன்றம் தான் அதனை தடுத்தது. – சுதன்ஷு திரிவேதி, பாஜக எம்.பி.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி ANI-க்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ‘தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் முஸ்லிம்கள் 70 சதவீதத்தினர் உள்ளனர். அப்பகுதியில் இந்துக்களின் கோயில் வழிபாடு இஸ்லாம் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதினால் அவர்கள் வழிபாடு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனை திமுக அரசும் ஏற்றுக்கொண்டது. பிறகு சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது’ எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி கூறியது தொடர்பாகத் தேடியதில், அது பெரம்பலூரில் உள்ள ‘வி.களத்தூர்’ என்பதை அறிய முடிந்தது. கொளத்தூர் முதல்வர் ஸ்டாலினின் தொகுதி.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் கிழக்கில் முஸ்லீம்கள், மேற்கில் இந்துக்கள் வசிக்கின்றனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இந்து கோயில் ஊர்வலங்கள் வரக்கூடாது என சுன்னத் வால் ஜமாத் சார்பிலும், அதற்கு அனுமதி வேண்டுமென ராமசாமி என்பவரது தரப்பும் 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
பிரதான சாலையில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என சில நிபந்தனைகளுடன் திருவிழா நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2018-ல் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து இரு தரப்பினரும் மேல்முறையீடும் செய்தனர். மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு 2021 ஏப்ரல் 30ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், கோவில் விழாக்களின் போது கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிரத் தடை விதிக்க முடியாது. எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் நடத்த அனுமதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல, மாற்று மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் மத ஊர்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினார். இந்த சம்பவங்கள் நடைபெற்றபோது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியிலிருந்தது. திமுக 2021, மே மாதம் 7ம் தேதி தான் ஆட்சிக்கு வந்தது.
நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து 2022, ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு மத பெரியவர்களையும் அழைத்துப் பேசி சுமூகமான முடிவு எட்டப்பட்டது. மேலும் இந்து பண்டிகைகளில் இஸ்லாமியர்களும் இஸ்லாமியப் பண்டிகைகளில் இந்துக்களும் மத நல்லிணக்கத்துடன் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வு தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ‘2012 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சில இந்து பண்டிகைகளைப் பாவங்கள் என்று கூறி எதிர்க்கத் தொடங்கினர்’ என நீதிமன்றத்தில் கூறப்பட்டதாக செய்தித்தாளின் படம் ஒன்றினையும் பகிர்கின்றனர்.
அச்செய்தியின் தலைப்பினை கொண்டு தேடியதில் அது 2021, மே 8ம் தேதி ‘Economic Times’ வெளியான கட்டுரை என்பதை அறிய முடிந்தது. ஆனால் முழுமையான வாக்கியத்தில், மூன்று நாள் கோயில் திருவிழா 2011ம் ஆண்டு வரை அமைதியாக நடத்தப்பட்டது என்றும், 2012ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சில இந்து பண்டிகைகளைப் பாவங்கள் என்று கூறி எதிர்க்கத் தொடங்கினர் என்றும் மனுதாரர் கூறியதாகவே அச்செய்தியில் மேற்கொள் காட்டியுள்ளனர். தீர்ப்பிலும் அவ்வாறே உள்ளது.
இப்பிரச்சனையின் ஆரம்பத்தில் தெருக்களில் ஊர்வலம் செல்வதில் முரண்பாடுகள் இருந்தாலும், நீதிமன்ற தீர்ப்பினாலும் அரசு அதிகாரிகளின் முன்னெடுப்பினாலும் அவை களையப்பட்டு தற்போது மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க : திமுக அரசு இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து இந்துகளுக்கு எதிராக வழக்கு எனத் திரித்து பரப்பப்படும் பழைய செய்தி !
இப்பொய்யை 2022ம் ஆண்டே யூடர்ன் உடைத்து கட்டுரை வெளியிட்டது.
முடிவு :
நம் தேடலில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி தமிழ்நாட்டில் இந்துக்கள் வழிபாடு நடத்தத் திமுக அரசு தடை விதித்தது எனக் கூறிய தகவல் உண்மை அல்ல. பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் இந்து திருவிழா ஊர்வலம் இஸ்லாமியர் பகுதிகளில் வரக்கூடாது என்றே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இரு மதத்தினர் இடையே அரசு அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தையினை நிகழ்த்தியதன் விளைவாக, இரண்டு தரப்பினரும் இரு மத நிகழ்வுகளிலும் பங்குபெறுகின்றனர் என்பதை அறிய முடிகிறது.