திமுக எம்.பி செந்தில் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
பரவிய செய்தி
திமுக’விட்டு வெளியேறும் செந்தில்குமார் எம்.பி.! கூட்டணி கட்சிகள் என்பதற்க்காக ஹிந்தி ஆதிக்கத்திற்கு துணை போகமுடியாது! கொள்கையை விட்டுவிட்டு திமுகவில் பயணிக்க விருப்பமில்லை.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் (டிச. 19) ‘இந்தியா’ (INDIA – Indian National Developmental Inclusive Alliance) கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் இந்தியில் பேசியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு கேட்டதாகவும் அதற்கு, இந்தி தேசிய மொழி. அனைவரும் கற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறியதாகவும் ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது. ஆனால், இது தொடர்பாக டி.ஆர்.பாலுவோ நிதிஷ் குமாரோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேபோல் திமுகவைச் சேர்ந்த எம்.பி செந்தில் குமார் டிசம்பர் 5ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசுகையில், பாஜக இந்தியை மையமாகக் கொண்ட மாநிலங்களில் மட்டுமே தேர்தலில் வெற்றி பெரும். அவற்றை பொதுவாக நாங்கள் கோமூத்திரா மாநிலங்கள் என அழைப்போம். தென் மாநிலங்களில் உங்களால் (பாஜக) வர முடியாது எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு வெளிப்படையாக செந்தில் குமார் மன்னிப்பும் கேட்டார்.
முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,
அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 5, 2023
இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் என்பதற்காக இந்தி ஆதிக்கத்திற்கு துணை போகமுடியாது எனக் கூறி செந்தில் குமார் திமுகவில் இருந்து விலகியுள்ளார் என புதிய தலைமுறை பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மையா வா? pic.twitter.com/hjScNc4mtk
— Sumathi Selvaraj (@SumathiSelvar12) December 26, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ‘26.12.2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்படி அந்த நியூஸ் கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என அவரது X (எக்ஸ்) பக்கத்தில் தேடினோம். அவ்வாறு எந்தவித கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
மேலும் எந்த ஊடகத்திலும் அவர் அப்படி கூறியதாக செய்தி வெளியாகவில்லை. இதுகுறித்து, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், அது தங்கள் ஊடகத்தின் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு என்பதை தெரிவித்தனர்.
இவற்றில் இருந்து இது போலியாக எடிட் செய்யப்பட நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது புதிய தலைமுறை பெயரில் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.