மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது திமுகவினரா ?

பரவிய செய்தி

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை திமுகவினர் சென்ற சொகுசுகார் முந்திச்செல்ல முயன்ற போது வழி கிடைக்காத ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டி திமுகவினர் அராஜகம்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சொகுசுகார் ஒன்று முந்திச் செல்ல முயன்ற போது வழி கிடைக்காததால் ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு ஓட்டுநர் கையை வெட்டி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை அறிந்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

” மதுரை-திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு காளவாசல் அருகே சென்ற போது, பேருந்திற்கு பின்னால் வந்த கார் ஒன்று முந்தி செல்ல முயன்றது. குறுகலான சாலை மற்றும் வாகன நெருக்கடியால் கார் ஓட்டுநரால் பேருந்தை முந்த முடியவில்லை. பேருந்து காரில் உரசியதாகவும் தெரிகிறது. முடக்குச் சாலை அருகே பேருந்தை முந்திய கார் ஓட்டுநர் சுரேஷ் பேருந்தை வழிமறித்து அரசு பேருந்து ஓட்டுநர் முத்துகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரும்புக் கம்பியால் பேருந்து கண்ணாடியை உடைத்தவர், பேருந்து ஓட்டுநரை தாக்கியதால் அவரின் வலதுகையில் படுகாயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது.

இதனால் அடுத்தடுத்து வந்த அரசு பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் தாக்கிய கார் ஓட்டுநரை கைது செய்யக் கோரி வலியுறுத்தினர். இதுதொடர்பாக, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன எண் மூலம் கார் ஓட்டுநரை கண்டுபிடித்தனர். சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர் ” எனச் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

அரசு பேருந்து ஓட்டுநர் கையை வெட்டிய நபர் திமுகவைச் சேர்ந்தவர் எனக் கூறி சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினரே பரப்பி வருகிறார்கள். ஆனால், சம்பவம் குறித்தும், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் வெளியான செய்திகள் எதிலும் கட்சிக் குறித்து குறிப்பிடவில்லை.

அதேபோல், வைரலாகும் வீடியோவில் காண்பிக்கப்பட்ட காரில் திமுக கட்சிச் சார்ந்த அடையாளங்கள் ஏதும் தென்படவில்லை.

ஆகையால், மதுரை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அது தவறான தகவல். அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவித்தார்.

முடிவு : 

நம் தேடலில், மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது திமுகவினர் என்று நிரூபிக்கக் கூடிய எந்தவிதமான ஆதாரங்களோ, செய்திகளோ இல்லை, காவல்துறையும் அதை தவறான தகவல் என்று மறுத்து இருக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button