திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் ஜீயருக்கு சல்யூட் அடித்தனரா ?
பரவிய செய்தி
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஜியருக்கு சல்யூட் அடித்த ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் காவல்துறை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் காவல்துறையினர் ஜீயர் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்குவதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஜியருக்கு சல்யூட் அடித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் காவல்துறை 🤣🤣🤣 pic.twitter.com/i24fHosH06
— நாம் தமிழர் முதசீர் (@MdMudas74725457) July 2, 2022
உண்மை என்ன ?
திமுக ஆட்சியில் தருமபுர ஆதீனம் பல்லக்கு விவகாரம், பசு மடம் , திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர் வைப்பது , பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி தடை என பல விசயங்களுக்கு விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், தமிழக காவல்துறை ஜீயருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி இருந்தால் ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி இருக்கும். ஆனால், அப்படி செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
வைரல் செய்யப்படும் வீடியோ தொடர்பாக கீ வார்த்தைகளை கொண்டு தேடிய போது, ” 2017-ல் vandeguruparamparaam எனும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் ” சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த சுவாமிகள் கேரளாவில் யாத்ரா மேற்கொண்ட போது கேரள அரசு மரியாதை வழங்கியது. ஸ்ரீங்கேரி ஜகத்குரு ஒவ்வொரு முறையும் மாநில அரசு விருந்தாளியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார் ” எனக் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு காவல்துறை தரப்பில் அரசு மரியாதை வழங்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஜீயருக்கு சல்யூட் அடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஜீயருக்கு காவல்துறை சல்யூட் அடித்ததாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த 2017-ல் கேரளாவிற்கு சிருங்கேரி சங்கராச்சாரியார் வந்த போது அரசு மரியாதை அளித்த வீடியோ என அறிய முடிகிறது.