கர்ப்பிணி பெண்ணை 10கி.மீ சுமந்து சென்ற மருத்துவர் ஓம்கார் ஹோடா !
பரவிய செய்தி
” மனிதன் கடவுளாகிறான்..! ஒரிஸா மாநிலத்தில் சுபாமா மார்சே என்ற பெண் பிரசவத்திற்கு முன்பே அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட, அருகில் இருந்த PHC ல் மருத்துவர் ஓம்கார் ஹோடா வை அணுக, அவர் கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்தில் அவரது நிலை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த வசதிகளும் இல்லாமல் போக..
படுத்திருந்த கட்டிலுக்கு தன் தோள் கொடுத்து பத்து கிலோ மீட்டர் சுமந்து நடந்து சென்று மருத்துவமனையில் பிரசவம் நல்லபடியாக நடந்திருக்கிறது.
UNICEF நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்த பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், இந்த நிகழ்ச்சியை விவரித்து மருத்துவர் ஓம்காரையும் பாராட்டி பேசியிருக்கிறார். இறுதியாக தன் பேச்சில், அன்னையாகும் தருணத்தில் ஒரு பெண்ணுக்கு, நம்பிக்கை கொடுக்க இரு கரங்கள் வேண்டும் என்று முடித்திருக்கிறார். இங்கு டாக்டர் ஓம்கார்…மனிதன், தெய்வமாகி இருக்கிறார் ” .
மதிப்பீடு
விளக்கம்
இன்றும் இந்தியாவில் இருக்கும் தொலைதூர கிராமப்பகுதிகள், மலைவாழ் மக்களின் வசிப்பிடங்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதே உண்மை. பல இடங்களில் தேவையான போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ மையங்கள் இல்லாமல் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை பல கி.மீ தொலைவிற்கு சுமந்து செல்லும் நிலை தொடர்கிறது.
” அப்படியான நிகழ்வு ஒன்றில் ஓம்கார் ஹோடா என்ற மருத்துவரே கர்பவதியாக இருக்கும் பெண்ணை 10 கி.மீ தொலைவிற்கு சுமந்து சென்று மருத்துவமனையில் பிரசவம் நிகழ்ந்ததாக ” இந்திர விஜய ராணி என்ற முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவாகி இருந்தது. அதிக கவனம் பெறாத பதிவாக இருந்தாலும் அனைவரும் அறிய வேண்டிய பதிவாக இருக்கிறது. ஆகையால், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
2017 அக்டோபர் 31-ம் தேதி ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரி மாவட்டத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் இடத்தில் கர்ப்பமாய் இருந்த பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்பாக அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமானதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர் ஓம்கார் அறிவுறுத்தினார்.
ஆனால், அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதிய வசதிகள் ஏதும் இல்லை என்பதால் அவர் படுத்திருந்த கட்டிலை சுமந்து செல்லும் வகையில் மாற்றி மருத்துவர் ஓம்கார் மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் 10கி.மீ தொலைவிற்கு சுமந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். காடுகள், மலைப்பாதையில் அப்பெண்ணை சுமந்து சென்று மருத்துவமனையில் நல்விதமாக பிரசவம் பார்க்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் வைத்து மலை பாதைகளில் சுமந்து செல்லும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடங்கள், செய்தி ஊடகங்கள் என அதிக அளவில் பரவி மருத்துவர் ஓம்கார் பாராட்டுக்களை பெற்றார்.
2018-ம் ஆண்டு மே மாதம் பாலிவுட் நடிகையான கரீனா கபூர் UNICEF-ன் அன்னையர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது மருத்துவர் ஓம்கார் ஹோடாவின் சேவையை விளக்கி பாராட்டுக்களைத் தெரிவித்து இருந்தார்.
நிஜ உலகத்திலும் ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒடிசா நிகழ்வு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நமக்கு எடுத்துரைக்கின்றன. மருத்துவர் ஓம்கார் ஹோடாவின் செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மருத்துவர் ஓம்கார் கர்ப்பிணி பெண்ணை பல கி.மீ சுமந்து சென்ற நிகழ்வு அனைவரின் கவனத்தையும் பெறச் செய்தது.
எனினும், இதுபோன்ற சம்பவங்கள் அரிதான நிகழ்வு இல்லை. மருத்துவ வசதியை பெறுவதற்காக அவசரத்திற்கு போதிய வசதிகள் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கட்டிலில் வைத்து செல்வது ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறவே செய்கிறது. குறிப்பாக, இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வழியில்லாமல் பல கிராமப்புற பகுதிகள் இருக்கின்றன என்பது எதார்த்தம்.