பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாகப் பரவும் போலிசெய்தி!
![](https://youturn.in/wp-content/uploads/2024/04/vijay-Fact-Check.jpg)
பரவிய செய்தி
வளர்ச்சியை கெடுக்கும், பிரிவினைவாதம் பேசும் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – நடிகர் விஜய்
மதிப்பீடு
விளக்கம்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய், திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாகக் கூறி, புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
பரவி வரும் புகைப்படத்தில், “எல்லோருக்கும் வணக்கம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் யார் கருத்தில் கொண்டு செயல்படுவார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய், மார்ச் 31 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது போன்றும் உள்ளது.
பிரேக்கிங் நியூஸ் :– நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள். பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று வேண்டுகோள். தேசிய வளர்ச்சிக்கு பாடுபடும் கட்சிக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்து உள்ளார். pic.twitter.com/XmxehYtGLT
— Saravanan Dgl(மோடியின் குடும்பம் ) (@ksn_dgl) April 2, 2024
பிரேக்கிங் நியூஸ் :– நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள். பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று வேண்டுகோள். தேசிய வளர்ச்சிக்கு பாடுபடும் கட்சிக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்து உள்ளார். pic.twitter.com/ZqUpIyRDKF
— Bjp Natham Social Media Cell (@JpnPillai) April 2, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, தமிழக் வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை ஆய்வு செய்து பார்த்தோம்.
அதில் பரவி வரும் புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நடிகர் விஜய், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் மார்ச் 31 அன்று, “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள் – விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்ததையே காண முடிந்தது.
உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்— TVK Vijay (@tvkvijayhq) March 31, 2024
இதைத் தவிர்த்து மார்ச் 31 அன்று, வேறு எந்த அறிக்கையையையும் அவர் வெளியிடவில்லை. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது போன்று சிலர் எடிட் செய்து தவறாகப் பரப்பியுள்ளனர்.
இதன் மூலம், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாகக் பரவி வரும் கட்சி அறிக்கை போலியானது என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: நடிகர் விஜய்க்கு ஸ்வீட் ஊட்டும் போது முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் எனப் பரவும் கன்னட நடிகரின் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது.