ஆச்சி மசாலா நிறுவனம் போதைப் பொருள் கடத்தியதாகப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

மதமாற்றம் செய்யும் ஆச்சி மசாலா போதைமருந்தும் கடத்தும் தொழிலும் செய்கிறது முக்கியமா ஆச்சி மசாலாவை தடைசெய்ய வேண்டும். கம்பெனி இழந்து மூடவேண்டும்.

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

ஆச்சி மசாலா பாக்கெட்டுகளில் மறைத்துக் கடத்த முயற்சி செய்த 30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ சூடோபீட்ரின் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே ஆச்சி மசாலாவை தடை செய்ய வேண்டும் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக் கூடிய படத்தில் ‘மோகன் இந்து’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு தேடியதில் இத்தகவலை அவர் தனது பேஸ்புக்கில் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. இதே புகைப்படம் மற்றும் தகவலைப் பலரும் பதிவிட்டுள்ளனர்.

Facebook link 

அப்பதிவில் உள்ள புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமெஜ் சர்ச் மூலம் தேடியதில், இது தொடர்பாக ‘ANI’ 2020 அக்டோபர் 13ம் தேதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட செய்தி கிடைத்தது.

அதில், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரியர் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு மசாலாப் பொடிகளில் மறைத்துக் கடத்த முயற்சி செய்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ சூடோபீட்ரின் என்னும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக DNA, PIB இணைய தளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. சாதிக் என்பவர் பெங்களூரைச் சேர்ந்தவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, சென்னையைச் சேர்ந்த கான் என்பவரது உதவியுடன் மசாலா பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

பிறகு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டனி என்பவர் அந்த பாக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு கொரியர் அனுப்ப முன்பதிவு செய்துள்ளார். முன்பதிவில் தனது முகவரியைப் பயன்படுத்தாமல் இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத தனது நண்பரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தியுள்ளார். இவை விசாரணையில் தெரியவந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் அப்போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி 2020ம் ஆண்டு பரவிய போதே இது குறித்து ஆச்சி மசாலா நிறுவனம் தங்களது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில், ”கடந்த இருபது ஆண்டுகளாக மக்களிடையே நன்மதிப்பை பெற்று, உணவுப் பொருட்கள் தயாரிப்பில் சிறப்பாக சேவை செய்து கொண்டிருக்கும், நமது ஆச்சி மசாலாவின் மசாலா பொட்டலங்களை சிலர் சமூக விரோத செயலுக்காக பயன்படுத்தியதை ஆச்சி மசாலா நிறுவனம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆச்சி மசாலா பாக்கெட்டுகளை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆச்சி மசாலா நிறுவனமே போதைப் பொருள் கடத்தியதாக ஒரு தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. ஆச்சி மசாலா நிறுவனர் ஏ.டி.பத்மசிங் ஐசக் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்துத்துவாவினர் தொடர்ந்து அந்நிறுவனம் பற்றி வதந்திகளைப் பரப்புகின்றனர்.

மேலும் படிக்க : ஆச்சி மசாலாவில் ஆண்மை குறைவு மருந்து கலக்கப்படுவதாக வதந்தி!

இதற்கு முன்னரும் ஆச்சி மசாலா நிறுவனம் பற்றிப் பரவிய போலி செய்திகள் குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஆச்சி மசாலாவிற்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டதா ? உண்மை என்ன ?

முடிவு :

ஆச்சி மசாலா போதைப் பொருள் கடத்தியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. 2020ம் ஆண்டு ஆச்சி மசாலா பாக்கெட்டுகளை பயன்படுத்தி சிலர் போதைப் பொருள் கடத்த முயன்றுள்ளனர். அவர்கள் அப்போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader