This article is from Jul 14, 2021

துபாய் மசூதியில் முஸ்லீம் பெண்கள் ராம பஜனை பாடும் வீடியோவா ?

பரவிய செய்தி

துபாயில் ஒரு புதிய தொடக்கத்தில் முஸ்லீம் பெண்கள் ராம் பஜனை ஒரு மசூதியில் வழங்கினர், அவர்களது ஷேக் கணவர்கள் கைதட்டல் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்தனர். இது இந்தியாவில் செய்யப்பட்டிருந்தால் இஸ்லாம் ஆபத்தில் சிக்கியிருக்கும். 135 கோடி இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

துபாயில் உள்ள மசூதியில் முஸ்லீம் பெண்கள் ராம பஜனை பாடிய போது அவர்களின் கணவர்கள் கைதட்டி ஆதரவு அளித்ததாக பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் பஜனை பாடுவதும், ஷேக் உடையில் உள்ள ஆண்கள் கை தட்டும் 4 நிமிட மற்றும் 2 நிமிட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Facebook link

முஸ்லீம் பெண்கள் ராம பஜனை பாடுவதாக இவ்வீடியோ கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே முகநூல் உள்ளிட்டவையில் ஒவ்வொரு ஆண்டும் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படுவது பழைய வீடியோவாக இருப்பதால் அதன் காட்சி தரம் குறைந்து இருக்கிறது. எனினும், வீடியோவில் காணப்படும் பகுதி மசூதியை போன்று இல்லை.

முஸ்லீம் பெண்கள் ராம பஜனை பாடியது தொடர்பாக தேடுகையில், 2012-ல் gopi jags எனும் யூடியூப் சேனலில் ” சத்ய சாய் பாபா பஜனை மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அவர்களது அரபு பக்தர்களால் ” என தலைப்பில் வெளியான வீடியோவில் வைரல் செய்யப்படும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.

2012 ஜூலையில் சத்யா சாய் பாபா யூடியூப் சேனலில், ” SARVA DHARMA SWAROOPA SAI ” – ARABIAN CHOIR ” எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் 44வது நிமிடத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சி எடுக்கப்பட்டு பகிரப்பட்டு இருக்கிறது.

வீடியோ விளக்கத்தில், பஹ்ரைன், ஈரான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட சாய் அமைப்பின் 94 பிராந்தியத்தில் இருந்து வந்த பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் அரபு சுவையை(பஜனை பாடல்) வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் செய்யப்பட்டிருந்தால் இஸ்லாம் ஆபத்தில் சிக்கியிருக்கும் எனப் பகிரப்படும் பதிவுகளில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பஜனை நிகழ்ந்ததே இந்தியாவில்தான்.

அரபு பக்தர்கள் பஜனை பாடல் பாடியது பிரசாந்தி நிலையத்தில், மசூதியில் அல்ல. பிரசாந்தி நிலையம் என்பது சத்யா சாய் பாபாவின் முதன்மை ஆசிரமமே. இது ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புத்தபார்தி எனும் கிராமத்தில் அமைந்து இருக்கிறது. முஸ்லீம்கள் மட்டுமே ஆசிரம பஜனையில் கலந்து கொள்ளவில்லை, இந்துக்கள் உள்பட பிற மதத்தினர் மற்றும் பிற நாட்டினர் பலரும் கலந்து கொண்டும் இருந்து உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், துபாய் மசூதியில் முஸ்லீம் பெண்கள் ராம பஜனையை வழங்கியதாக பகிரப்படும் வீடியோ தவறானது. இது துபாய் மசூதியில் நிகழ்ந்த ராம பஜனை அல்ல. 2012-ல் ஆந்திராவில் உள்ள சத்யா சாய் பாபாவின் ஆசிரமத்தில் அவரின் அரபு பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல் பாடிய வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader