நாம் தமிழர் கட்சியில் இருந்து துரைமுருகன் மீண்டும் நீக்கப்பட்டதாக வதந்தி !
பரவிய செய்தி
திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்த அ.துரைமுருகன்(16450527843) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது – நாம் தமிழர் கட்சி
மதிப்பீடு
விளக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய சாட்டை யூடியூப் சேனலின் துரைமுருகன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சி குறித்தும், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் துரைமுருகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட துரைமுருகன் நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் நீக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிக்கைகள் உடன் இதையும் இணைத்தே பரப்பி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகளில் நடுவில் லோகோ இடம்பெற்று இருப்பது வழக்கம். ஆனால், வைரல் செய்யப்படும் அறிக்கையில் அப்படி லோகோ இடம்பெறவில்லை. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தளங்களிலும் அப்படியொரு அறிக்கை வெளியிடவில்லை.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” இது போலியானது. அப்படியொரு அறிக்கை வெளியிடவில்லை ” என பதில் அளித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டதாக பரப்பப்படும் அறிக்கை போலியானது என அறிய முடிகிறது.