திமுகவைச் சேர்ந்த சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை என பொய் செய்தி பரப்பும் சவுக்கு சங்கர்!
பரவிய செய்தி
திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை.
மதிப்பீடு
விளக்கம்
2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பலரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் குறித்து பல்வேறு செய்திகளை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை என்று குறிப்பிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த சிற்றரசு உடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை சவுக்கு சங்கர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதைக் காண முடிகிறது.
திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை. pic.twitter.com/vGHKt2r0RZ
— KAVIN ADMK (@kavin8715431675) April 9, 2024
திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை. pic.twitter.com/P4DfHyqFkI
— ச.மகாபாண்டி MA,M.Ed.,-Say No To Drugs & Dmk (@mahapandi_ADMK) April 9, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் ஏப்ரல் 09 அன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது உண்மையே என்பதை அறிய முடிந்தது.
Times of India இது குறித்து ஏப்ரல் 09 அன்று “தமிழ்நாடு: போதைப்பொருள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ED பல இடங்களில் சோதனை” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) செவ்வாய்க்கிழமை காலை சோதனையைத் தொடங்கியது.
காலை 7 மணியளவில் தேடுதல் தொடங்கியது மற்றும் ED குழுக்கள் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை அடைந்தனர். ஜாபர் சாதிக் உடனான தொடர்புக்காக சமீபத்தில் டெல்லியில் என்சிபியால் விசாரிக்கப்பட்ட திரைப்பட இயக்குனரான அமீரின் அலுவலகமும் திநகரில் சோதனை செய்யப்பட்டது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதில் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தியது தொடர்பாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே இது குறித்து யூடர்ன் தரப்பிலிருந்து திமுக மாவட்டச் செயலாளரான சிற்றரசையும் தொடர்பு கொண்டு பேசினோம். தன்னுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறிய செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டு, பரவி வரும் செய்திகளுக்கு தன்னுடைய மறுப்பையும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமையா? தவறாக திரித்துப் பரப்பும் பாஜகவினர்!
மேலும் படிக்க: கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த பெண்மணி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ
முடிவு:
நம் தேடலில், திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.