தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக போலிச் செய்தி !
பரவிய செய்தி
தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். அண்ணன ஓ.பி.எஸ் அவர்கள் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கி கட்சியைக் கைப்பற்ற நினைத்தால் தாமரை சின்னத்தில் நின்று வெற்றிப்பெறுவோம். எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி
மதிப்பீடு
விளக்கம்
அதிமுக கட்சியில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இடையே உருவான அதிகார மோதலால் அவர்களின் ஆதரவாளர்களுக்குள் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தற்போது அலுவலகத்தை மீட்கும் நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அவர்கள் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கி கட்சியைக் கைப்பற்ற நினைத்தால் தாமரை சின்னத்தில் நின்று வெற்றிப்பெறுவோம் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில், ” தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். அண்ணன ஓ.பி.எஸ் அவர்கள் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கி கட்சியைக் கைப்பற்ற நினைத்தால் தாமரை சின்னத்தில் நின்று வெற்றிப்பெறுவோம்” எனும் பகுதி எடிட் செய்யப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும், நியூஸ் கார்டில் ஜூனியர் விகடன் லோகோவும் இடம்பெறவில்லை.
இதுகுறித்து ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ” ஜூலை 12-ம் தேடி எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை ” என அறிய முடிந்தது. ஜூனியர் விகடன் நியூஸ் கார்டை எடுத்து போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர்.
மேலும் படிக்க : எம்ஜிஆருக்கு மீண்டும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாரா ?
இதேபோல், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று தன் பேச்சை தொடங்கினார் என வதந்தி பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். அண்ணன ஓ.பி.எஸ் அவர்கள் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கி கட்சியைக் கைப்பற்ற நினைத்தால் தாமரை சின்னத்தில் நின்று வெற்றிப்பெறுவோம். எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியதாக வைரல் செய்யப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.