எடப்பாடி பழனிச்சாமி வார் ரூமில் இருந்ததாக பரப்பப்படும் நிவர் புயலில் எடுத்த புகைப்படம் !
பரவிய செய்தி
தமிழக மு.க பணியாளர்களே.. இதேமாறி தான போன ஆட்சில அன்றைய முதல்வர் @EPSTamilNadu அவர்கள் war Room-க்கு போய் ஆய்வு பண்ணாரு.. இப்போ இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் war Roomக்கு போனதுக்கு நீங்க கொடுக்குற Publicity முக்கியதுவம் ஏன் அப்ப EPSக்கு கொடுக்கல..
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா தொடர்பாக அமைக்கப்பட்ட வார் ரூமியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, அங்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய நிகழ்வு செய்திகளில் வெளியாகி சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா வார் ரூமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என இப்புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு இருக்கிறது.
தமிழக மு.க பணியாளர்களே
இதேமாறி தான போன ஆட்சில அன்றைய முதல்வர் எடப்பாடி.பழனிசாமி அவர்கள் war Room க்கு போய் ஆய்வு பண்ணாரு..
இப்போ இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் war Room க்கு போனதுக்கு நீங்க கொடுக்குற Publicity முக்கியதுவம் ஏன் அப்ப EPSக்கு கொடுக்கல…..
சொல்லுங்கள் மு.க.ப pic.twitter.com/p8MYoM4W32
— Karthi Thondamuthur 🇮🇳 (@karthiabvp) May 15, 2021
உண்மை என்ன ?
கொரோனா பணிக்காக உருவாக்கப்பட்ட வார் ரூமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடுவதாக பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2020 நவம்பரில் நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றதாக ” வெளியான செய்திகளில் இப்புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
2020 நவம்பர் 25-ம் தேதி வெளியான நியூஸ்18 செய்தியில், ” சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்ற முதலமைச்சர், புயல் கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் ” என வெளியாகி இருக்கிறது.
2020 மே மாதம் 12-ம் தேதி வெளியான விகடன் கட்டுரையில், ” எடப்பாடி பழனிச்சாமியின் கொரோனா வார் ரூமை முழுவதுமாக மேற்பார்வையிடுவது அவரது மகன் மிதுன் ” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த அதிகாரிகள் கொரோனா வார் ரூமில் இருக்கிறார்கள் என விரிவான தகவல் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வார் ரூம் போய் ஆய்வு செய்த போது ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பகிரப்படும் புகைப்படம் நிவர் புயலின் போது சென்னையில் உள்ள கட்டுப்பாடு அறைக்கு சென்று பார்வையிட்ட போது எடுக்கப்பட்டது. இது தொடர்பாக செய்திகளும் வெளியாகி இருக்கின்றன என அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
2020 மார்ச் 27-ம் தேதி, ” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார் ” என CMOTamilNadu ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார். pic.twitter.com/rCHPrr56h0
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 27, 2020