“தேனீக்கள் இனம் இல்லையென்றால் மனித இனமே இருக்காது” என ஐன்ஸ்டைன் கூறினாரா ?
பரவிய செய்தி
தேனீக்கள் என்ற ஒரு இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளார் – சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார்
விளக்கம்
2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கரூர் வேட்பாளர் ரெ.கருப்பையாவை ஆதரித்து ஏப்ரல் 02 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “தேனீக்கள் என்ற ஒரு இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது, அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளார்” என பேசியுள்ளது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
சீமான் கூறியது போன்று “தேனீக்கள் என்ற ஒரு இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது, அழிந்துவிடும்” என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம்.
Forbes இணையதளப்பக்கத்தில் இது குறித்து “ஐன்ஸ்டீன் மற்றும் தேனீக்கள். நீங்கள் கவலைப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், “தேனீ பூமியில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ இன்னும் நான்கு ஆண்டுகள் மட்டுமே இருக்கும். பொதுவாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்குக் கூறப்படும் இந்த மேற்கோளை நீங்கள் பார்த்திருக்கலாம். ஐன்ஸ்டைன் அப்படிச் சொன்னதற்கு முற்றிலும் ஆதாரம் இல்லை என்று சூழலியல் மற்றும் நீரியல் மையத்தின் சூழலியல் நிபுணர் மைக்கேல் போகாக் கூறியுள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று Snopes.com என்ற பக்கத்திலும் இது குறித்து தெளிவாக ஆய்வு செய்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், “ஐன்ஸ்டைன் உண்மையில் தேனீக்கள் என்ற ஒரு இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது, அழிந்துவிடும் என்று சொன்னாரா? என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஐன்ஸ்டைனின் எழுத்துக்கள், உரைகள், பொது அறிக்கைகள் மற்றும் ஐன்ஸ்டைனின் மேற்கோள்களின் தொகுப்புகளின் தேடல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்ததில், “நான்கு வருடங்கள்” என்று குறிப்பிட்டோ, அல்லது “தேனீக்கள்” குறித்தோ எந்த வார்த்தைகளையும் அவர் குறிப்பிடவில்லை என்பதை அறிய முடிந்தது. “The New Quotable Einstein” என்ற நூலின் தொகுப்பாளரும், இது அனேகமாக வேறு யாராலோ குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஐன்ஸ்டைன் 1955 இல் இறந்து விட்டார். 1994 இல் பிரஸ்ஸல்ஸில் தேனீ வளர்ப்பவர்களால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றிய செய்தித்தாள் கட்டுரைகளில் தான் ஐன்ஸ்டைன் தேனீக்கள் குறித்து இவ்வாறு கூறியதாக திடீரென வெளிவரத் தொடங்கியது. அதே சமயம், ஐன்ஸ்டைன் ஒரு இயற்பியலாளர் தானே தவிர, ஒரு பூச்சியியல் வல்லுநரோ அல்லது தாவரவியலாளரோ (அல்லது வேறு எந்த வகையான உயிரியலாளரோ) அல்ல. எனவே அவர் கூறியிருக்க வாய்ப்புகள் இல்லை” என்றும் அதில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம் தேனீக்கள் என்ற ஒரு இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது, அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகக் கூறி, கடந்த 1994 இல் இருந்தே இந்த செய்தி இணையதளங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஆனால் ஆய்வுகளின் படி, ஐன்ஸ்டைனின் எழுத்துக்கள், உரைகள், பொது அறிக்கைகள் மற்றும் ஐன்ஸ்டைனின் மேற்கோள்களின் தொகுப்புகளின் தேடல்கள் ஆகிய அனைத்தையுமே ஆய்வு செய்து பார்த்ததில், எதிலுமே இது குறித்து ஐன்ஸ்டைன் எதுவும் குறிப்பிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் இந்த வாக்கியங்களை உண்மையில் யார் கூறினார்கள் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.
மேலும் படிக்க: சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டதாக சர்க்காரியா கமிஷனிடம் கலைஞர் சொன்னதாகப் பரவும் பொய்
மேலும் படிக்க: சீமான் மதுபோதையில் மேடையில் பேசியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!
முடிவு:
தேனீக்கள் என்ற ஒரு இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது, அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாக எந்த ஆதாரங்களும் இல்லை.