கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த பெண்மணி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ

பரவிய செய்தி

வருடம் 1 லட்ச ரூபாய் கொடுப்பனு ஏமாத்துவாங்கனு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கார்த்திக் சிதம்பரம் முன்னிலையிலே கிழித்த பாட்டி.

X link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி அவர்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் மகாலட்சுமி என்னும் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி உள்ளது. 

இந்நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை அருகில் வைத்துக் கொண்டு பேசும் பெண்மணி ஒருவர், ‘வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறேன் என்றால் ஏமாந்து விடாதீர்கள்’ எனக் கூறியதாக 8 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் ’பாலிமர் நியூஸ்’ என்ற லோகோ உள்ளது. அதனைக் கொண்டு அந்த சேனலின் சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். இதன் முழு வீடியோ அவர்களது பேஸ்புக் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவிடப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில் பெண்மணி ஒருவர் ’நமது ஓட்டு’ என முழங்கியபடி காங்கிரஸ் கட்சிக் கொடியை உயர்த்தி பிடிக்கிறார். அப்போது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் அப்பெண்மணியின் அருகில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். 

திமுகவிற்கு ஓட்டுப் போட வேண்டுமென்று தனது 8 வயதிலேயே தோன்றியதாக அவரது வாழ்க்கையில் நடந்ததை சம்பத்தைப் பற்றி அப்பெண்மணி விவரிக்கிறார். பிறகு, “8 வயதில் கலைஞருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற எண்ணம் பதிந்தது. நம்ம கலைஞருடன் இணைந்த ஐயா கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நமது ஓட்டை என்னைக்கும் பதிய வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். 

அதனைத் தொடர்ந்து, “இன்னைக்கு பெற்றோர்கள் எல்லாம் இருக்கிறீர்கள். ஒவ்வொரு மகளுக்கும் மாதம் மாதம் பணத்தொகை வந்து கொண்டு உள்ளதா? நீங்க மாதம் மாதம் ரூ.1,000 வாங்குவது தனி. உங்களது பெண் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கில் ஏறுகிறதா? அதையெல்லாம் மறந்து விடாதீர்கள். ரிசர்வ் வங்கியில் அடிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் என்றால் ஏமாந்து விடாதீர்கள். அது அப்படித்தான் சொல்லுவார்கள். அதெல்லாம் நடக்காது” எனப் பேசியுள்ளார். 

அந்த பெண்மணி கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்கு செலுத்தச் சொல்லி ஆதரவாகவே பேசியுள்ளார். ஆனால், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் திட்டம் யாருடையது எனத் தெரியாமல் அது குறித்து விமர்சித்துள்ளார். அப்பெண்மணி பேசியதில் சிறு பகுதியை மட்டும் வெட்டி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சி வேட்பாளர் முன்னிலையிலேயே விமர்சித்ததாகத் பரப்புகின்றனர். 

முடிவு : 

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கும் காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம் குறித்து கார்த்திக் சிதம்பரத்தை அருகில் வைத்துக் கொண்டு பெண்மணி விமர்சித்ததாகப் பரவும் முழு வீடியோவில், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளதைக் காண முடிகிறது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader