This article is from Feb 19, 2021

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் நீக்கப்பட்டு இந்தியில் பெயர் பலகையா ?

பரவிய செய்தி

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தியை மூன்றாம் மொழியாக ஏற்காத போதே தமிழ் தூக்கியடிக்கப்படுகிறது. மூன்றாம் மொழியானால் தமிழ் மொத்தமாய் காணாமல் போய்விடும்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வைக்கப்பட்ட பெயர் பலகையை நீக்கி விட்டு இந்தியில் பெயர் பலகையை பெரிதாக வைத்து உள்ளதாக இரு புகைப்படங்களை கொண்ட மீம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Facebook link | Archive link

உண்மை என்ன ?  

2021 ஜனவரி 19-ம் தேதி வெளியான தி ஹிந்து ஆங்கில செய்தியில், ” ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு பகுதி, டிக்கெட் பெறும் இடம், பதிவு செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி சரியான நேரத்தில் முடிவடையும் ” என வெளியாகி இருக்கிறது.

ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்து டிஜிட்டல் பெயர் பலகை எனப் புதுப்பொலிவுடன் இருக்கும் புகைப்படங்களை பலரும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த தமிழ் பெயர் பலகை நீக்கப்படவில்லை. மூன்று மொழிகளில் ஒன்றாக இருந்த பெயர் பலகை தனித்தனியாக வைக்கப்பட்டு உள்ளது. முகப்பில் தமிழ், இடப்புறம் ஆங்கிலம் மற்றும் வலப்புறத்தில் இந்தி என பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

News link | Archive link 

பிப்ரவரி 14-ம் தேதி சன் நியூஸில் ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி அறிவிப்பு பெயர் பலகை என வெளியான செய்தியில், ஈரோடு ரயில் நிலையத்தின் பல பகுதிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி பெயர் பலகைகள் தனித்தனியாக முகப்பில் வைக்கப்பட்டு உள்ளதை காணலாம். ரயில் நிலையத்தின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்கும் அறிவிப்பு பலகைகளில் மூன்று மொழிகளிலும் இடம்பெற்று இருப்பதை காண முடிந்தது.

முன்பு, ரயில் நிலையத்தின் முகப்பில் மூன்று மொழியிலும் பெயர் பலகையை ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தனித்தனியாக வைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் பெயர் பலகை இடம்பெறுவது தொடர்பான சர்ச்சை எழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டும், சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழியில் இருந்த பெயர் பலகை நீக்கப்பட்டு இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக வதந்திகள் பரவின.

மேலும் படிக்க : சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை !

ஆனால், அங்கும் இதேபோல் பெயர் பலகை மூன்று மொழிகளில் தனித்தனியாக வைக்கப்பட்டு உள்ளது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்

முடிவு : 

நம் தேடலில், ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் இருந்த பெயர் பலகை நீக்கப்பட்டு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளதாக பரவும் தகவல் தவறானது. ரயில் நிலையத்தின் முகப்பில் தமிழில் பெயர் பலகை இருப்பதை அறிய முடிந்தது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader