நீக்கப்படும் போலியான கணக்குகள்: ஃபேஸ்புக் & ட்விட்டர் அதிரடி..!

பரவிய செய்தி
அதிரடியாக நீக்கப்படும் போலியான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள். சில மாதங்களில் மட்டும் கோடிக்கணக்கில் போலியான கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.
மதிப்பீடு
சுருக்கம்
6 மாதத்தில் 1.3 பில்லியன் போலியான கணக்குகளை கண்டறிந்து அதனை நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். கடந்த 2 மாதங்களில் 7 கோடி கணக்குகளை முடக்கியுள்ளது ட்விட்டர்.
விளக்கம்
சோசியல் மீடியா புதிய பரிணாம வளர்ச்சியாக உருபெற்றப் பிறகு மக்களின் பொழுதுபோக்கு அங்கமாக மட்டுமல்லாமல் வாழ்க்கையோடு ஒன்றியதாக மாறியது. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், ட்விட்டர் இல்லாமல் இன்றைய தலைமுறையினரால் வாழ முடியாத சூழல் உருவாகி விட்டது.
உலகில் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ளவும் உருவாகிய சோசியல் மீடியாவை பயன்படுத்தும் முறையே தற்போது மாறியுள்ளது..
தனிநபர், நிறுவனத்தின் விளம்பரம், தகவல், அரசியல் என பல்வேறு காரணங்களுக்காக போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு தவறான செயல்களை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆபாசமான பதிவுகள், அரசியல் கட்சிகளை உயர்த்தி பேச, வன்முறைகளை தூண்டும் விதத்தில் பேசுவதற்காக லட்சக்கணக்கான போலியான கணக்குகள் தொடங்கப்படுகிறது. இவற்றை நீக்கும் முயற்சியில் அந்நிறுவனங்கள் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஃபேஸ்புக் :
சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த முறை 2.2 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளதாக பெருமையாக அறிவித்தது. அதேவேளையில், 6 மாதத்தில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறிய மொத்த பயனாளர்களில் கிட்டத்தட்ட 50% அதாவது 1.3 பில்லியன் போலியான கணக்குகளை நீக்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதி மூன்று மாதங்களில் 694 மில்லியன் போலி கணக்குகளும், 2018 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 583 மில்லியன் போலி கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டும், ஆபாசம், தீவிரவாதம் மற்றும் கோபத்தை தூண்டும் பதிவுகள் என தவறான 865 மில்லியன் spam பதிவுகள் 2018-ல் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த போலியான கணக்குகளில் 21 மில்லியன் ஆபாச பதிவிடும் கணக்குகள், 2.5 மில்லியன் கணக்குகள் கோபத்தை தூண்டும் விதத்தில் பேசுபவை மற்றும் 2 மில்லியன் கணக்குகள் தீவிரவாத அமைப்புகள் பற்றி பேசுபவை என ரிப்போர்ட் அடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
எனினும், மாதம் பயன்பாட்டில் இருக்கும் கணக்குகளில் 4 இல் 3 போலியான கணக்குகளே என்றுள்ளனர். அதாவது ஃபேஸ்புக்கில் 66 மில்லியன் முதல் 88 மில்லியன் வரையிலானவை போலி கணக்குகளின் நீக்க நடவடிக்கையில் தப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் போலியான கணக்குகள் தொடர்ந்து நீக்கப்பட்டால் தற்போது உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடக்கூடலாம், அந்த அளவிற்கு போலியான கணக்குகள் உள்ளன.
ட்விட்டர் :
ட்விட்டரில் active users ஆக 330 மில்லியன் கணக்குகள் உள்ளன. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக ட்விட்டரில் அதிகளவில் போலியான கணக்குகளை நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போலியான கணக்குகளால் ட்விட்டரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 70 மில்லியன் போலியான கணக்குகளை கண்டறிந்து அவரை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது ட்விட்டர். கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் 3.2 மில்லியன் மற்றும் டிசம்பர் மாதத்தில் 6.4 மில்லியன் போலியான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலியான கணக்குகள் கோடிக்கணக்கில் இருந்துள்ளது, இன்றும் இருந்து வருகிறது. ஆகையால், தொடர்ச்சியாக போலியான கணக்குகளை நீக்கும் நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.