ராகுல்காந்தி தேர்தல் முடிவுக்கு பின் தாய்லாந்து செல்லவுள்ளதாகப் பரவும் போலி விமான டிக்கெட்!

பரவிய செய்தி

இது உண்மையா? அடுத்த பிரதமர் அவரது விடுமுறைக்கு பேங்காக் செல்கிறாரா? ஜூன் 5 ஆம் தேதி?

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடனே தோல்வியை தாங்கமுடியாமல் ஜூன் 05 அன்று தாய்லாந்து நாட்டின் தலைநகரான பேங்காக் செல்லவுள்ளார் என்று கூறி ராகுல்காந்தி பெயரில் உள்ள விமான டிக்கெட்டின் (போர்டிங் பாஸ்) புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதனை பாஜவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை ஆய்வு செய்து பார்த்ததில், போர்டிங் பாஸில் உள்ள விமான எண், இரண்டு இடங்களில் வெவ்வேறாக இருந்தன. ஒரு இடத்தில் ‘UK121’ என்றும், மற்றொரு இடத்தில் ‘UK115’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தத்தில், இதன் உண்மையான புகைப்படம் “Live From a Lounge” என்ற இணையதளப்பக்கத்தில் ஆகஸ்ட் 9, 2019 அன்று வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையின் மூலம், அஜய் அவ்தானி என்பவர் விஸ்தாராவின் முதல் சர்வதேச விமானத்தில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட போர்டிங் பாஸ் இது என்பதை அறிய முடிகிறது. மேலும் அதில் புறப்படும் தேதி ஆகஸ்ட் 6, 2019 என்றும், டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்வதாகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அஜய் அவ்தானி என்பவரது போர்டிங் பாஸை, ராகுல் காந்தி பெயரில் எடிட் செய்து தற்போது சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.

மேலும் படிக்க: ராகுல்காந்தி கையில் வைத்திருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம் என பாஜகவினர் பரப்பும் பொய்!

முடிவு:

நம் தேடலில், ராகுல்காந்தி மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்பு, ஜூன் 5 அன்று தாய்லாந்து செல்லவுள்ளதாகப் பரவும் விமான டிக்கெட் போலியானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader