ஆன்மீகவாதிகள் கலைஞரைப் பார்க்க வர வேண்டாம் எனக் கனிமொழி சொன்னதாகப் பரவும் போலி ட்வீட்!
பரவிய செய்தி
பழசு தான்… ஆனா இப்போ தும்முனா சரியா இருக்கும்
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதைப் பாருங்கள் எனப் புகைப்படம் ஒன்றை சரவணபிரசாத் பாலசுப்ரமணியம், இந்து மக்கள் கட்சி முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Never Forget
Never Forgive pic.twitter.com/cZccVKx2Gr— Indu Makkal Katchi (Offl) Modi Ka Parivar (@Indumakalktchi) March 24, 2024
அதில், ”உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை எந்த ஆன்மீகவாதியும் வந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை அர்ஜுன் சம்பத் கொடுத்த விநாயகர் கோவில் பிரசாதத்தை குப்பையில் தூக்கி எறிந்து விட்டேன் அதேபோல் திமுகவினர் யாரும் மொட்டை அடித்தல் கோவில் வழிபாடு போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடக்கூடாது” எனக் கனிமொழி பதிவிட்டது போல் உள்ளது.
உண்மை என்ன?
கனிமொழியின் எக்ஸ் தளப் பதிவு எனப் பரவக் கூடிய படத்தில் தேதி எதுவும் இல்லை. கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது கனிமொழி அப்படி ஏதேனும் கருத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
மேற்கொண்டு பரவக் கூடிய தகவல் குறித்து கனிமொழி தரப்பைத் தொடர்பு கொண்டு பேசியதில், ’அது போலியானது. கனிமொழியின் எக்ஸ் பக்கத்தில் அப்படி எந்த பதிவும் செய்யப்படவில்லை’ என விளக்கம் அளித்தனர்.
கனிமொழி பதிவிடாத ஒரு விஷயத்தைத் தேர்தல் நேரம் என்பதால், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக அவர் பேசிவிட்டார் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்கிறார் என்றும் ஒரு தவறான தகவலை வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
இதற்கு முன்னர் கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்றும் திருப்பதி பெருமாள் சிலையைப் பொம்மை என்றும் கூறியதாகப் பல போலி செய்திகள் பரவியது. அவை குறித்த உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : எம்.பி கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றதாக பாஜகவினர் பரப்பும் பொய்!
மேலும் படிக்க : திருப்பதி பெருமாள் சிலையைப் பொம்மை என்று எம்.பி கனிமொழி கூறியதாகப் பரவும் பொய் !
முடிவு :
கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது அவரை எந்த ஆன்மீகவாதிகளும் வந்து பார்க்க வேண்டாம் எனக் கனிமொழி கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது போலியாக உருவாக்கப்பட்டது.