தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பேசுவதாகப் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். 

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பல்வேறு பொய் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அதன் உண்மைத்தன்மைகள் குறித்து ‘யூடர்ன்’ கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொய் செய்தி பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறையும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் வலதுசாரி ஆதரவாளரான மனிஷ் காஷ்யப் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சில ஸ்கிரீன்ஷார்ட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில், இரண்டு இளைஞர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். 

மனிஷ் காஷ்யபின் அப்பதில், ‘தேஜஸ்வி யாதவ் இந்த புகைப்படங்களைப் பாருங்கள். பீகார் மாநில தொழிலாளர்கள் முகத்தில் காயங்களுடன் உள்ளனர். தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது உண்மைதான். அவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தான் பீகார் ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் பற்றி பொய்களைப் பரப்பவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன ? 

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக மனிஷ் காஷ்யாப் பதிவிட்ட ஸ்க்ரீன் ஷார்டில் ‘BNR News Reporter Honey’ என இருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்பெயரைக் கொண்டு இணையத்தில் தேடினோம். 

BNR News Reporter Honey என்ற யூடியூப் பக்கத்தில் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், காயமடைந்து சிகிச்சை பெற்றதாக இரண்டு இளைஞர்கள் காண்பிக்கப்படுகிறது.

அந்த வீடியோவின் Description-ல் பொறுப்பு துறப்பு எனக் குறிப்பிட்டு ‘இவ்வீடியோ பிரபல செய்தி ஊடகங்களில் வெளியான வைரல் வீடியோக்களின் தாக்கத்தினால் கற்பனையாக எடுக்கப்பட்டது. வைரல் வீடியோக்கள் பற்றிய அறிவையும் தகவலையும் வழங்குவதே எங்களது ஒரே நோக்கம். இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Archive link 

மேலும், இது குறித்துத் தேடியதில், தமிழ்நாடு காவல் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பரவக்கூடிய வீடியோ பற்றிப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல எந்த சம்பவமும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. இது ஒரு போலியான வீடியோ. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க : வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வர காரணம் என்ன ?

Archive link 

முன்னதாக இவ்வீடியோ சித்தரிக்கப்பட்டது என யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயனும் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பகிரப்படும் ஸ்கிரீன்ஷார்டில் உள்ள வீடியோ சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader