This article is from Dec 02, 2020

வயதான விவசாயி தாக்கப்படவில்லையா ?| உண்மைத்தன்மை எனப் பரப்பப்படும் பொய் பிரச்சாரம்!

பரவிய செய்தி

இவ்ளோ தாங்க மீடியா… பாதுகாப்பு வீரர் விவசாய பெரியவரை அடித்துவிரட்டுவதாக வைரலான புகைப்படத்தின் உண்மைத் தன்மை வெளியானது. நல்ல வேளை பிரதமர் மோடி அவர்கள் இன்டர்நெட் டேட்டாவை வரியின்றி திறந்துவிட்டதால் உண்மை உடனுக்குடன் மக்களை சென்றடைகிறது – மாரிதாஸ் ரசிக பக்கம்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

விவசாயிகள் போராட்டத்தில் வயதான விவசாயி ஒருவரை பாதுகாப்பு படை வீரர் அடிக்க லத்தியை ஓங்குவது போன்று இருக்கும் புகைப்படம் தேசிய அளவில் வைரலாகியது. ஊடகச் செய்திகளும் அப்புகைப்படத்தை வெளியிட்டனர். அதேபோல், ராகுல் காந்தியும் அப்புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Tweet archive link

ஆனால், பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அமித் மால்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,” விவசாயி பெரியவர் தாக்கப்படவில்லை, பொய்யான பிரச்சாரம் என ஓர் வீடியோவை ராகுல் காந்தியின் ட்வீட் உடன் பகிர்ந்து இருந்தார்.

Tweet archive link

மாரிதாஸ் பெயரில் இயங்கும் ரசிக பக்கம் ஒன்றிலும், வயதான பெரியவரை பாதுகாப்பு வீரர்கள் தாக்கவில்லை, தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அமித் மால்வியா பதிவிட்ட அதே வீடியோவை இணைத்து ஓர் வீடியோ பகிர்ந்து இருந்தனர்.

உண்மை என்ன ? 

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரவி செளத்ரி என்பவர் இந்த சம்பவத்தை எடுக்கும் போது கடினமாக இருந்ததாக தன் ட்விட்டர் பக்கத்தில் அப்புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டு இருந்தார்.

Archive link

அதேபோல், விவசாய பெயரியவரை பாதுகாப்பு வீரர் ஒருவர் லத்தியால் அடிப்பது போன்ற புகைப்படத்துடன் கூடிய போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Instagram archive link

போராடும் இந்திய விவசாயிகளும், டெல்லி சாலையில் போலீசிற்கும் இடையேயான மோதல் என 2020 நவம்பர் 27-ம் தேதி VOA News எனும் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில், மற்றொரு பாதுகாப்பு வீரர் வயதான விவசாயியை லத்தியால் அடிக்கும் காட்சியுடன் பதிவாகி இருக்கிறது. அதில், அடிக்கும் சத்தத்தை கேட்கலாம்.

அதற்கு அடுத்ததாக இடம்பெற்ற, மற்றொரு பாதுகாப்பு வீரர் லத்தியை ஓங்கும் புகைப்படமும், வீடியோ காட்சி மட்டுமே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. நவம்பர் 29-ம் தேதி பஞ்சாபி முகநூல் பக்கமொன்றில் வைரலான வீடியோவில் இருக்கும் வயதான விவசாயி கையில் இருக்கும் காயத்தை காண்பித்து தாக்கப்பட்டது குறித்து பேசும் வீடியோ பதிவாகி இருக்கிறது.

Facebook archive link 

டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகள் நுழைய முயற்சித்த போது போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்பொழுதே, வயதான விவசாயி தாக்கப்பட்டது இருக்கிறார். வைரலான புகைப்படம் மற்றும் வீடியோவில் காணப்பட்ட விவசாயி சங்கோஜ்லா பகுதியைச் சேர்ந்த 57 வயதான சுக்தேவ் சிங் ஆவார்.

” என் கால்கள், முதுகு மற்றும் கையில் காயங்கள் உள்ளன. லத்தி என் கணுக்காலில் தாக்கியது. என் காயங்களை அவர்கள் பார்க்க விரும்பினால் நான் காண்பிக்கின்றேன் ” என சுக்தேவ் சிங் பேசிய வீடியோவை பூம்லைவ் இணையதளம் வெளியிட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், டெல்லி எல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வயதான விவசாய பெரியவர் தாக்கப்படவில்லை என பரப்பப்படும் தகவலும், வீடியோவும் தவறானது. அந்த காட்சிக்கு முன்பாக மற்றொரு பாதுகாப்பு வீரரை தாண்டி செல்லும் போது தாக்கப்பட்ட காட்சியும், சுக்தேவ் சிங் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் தாக்கப்பட்டது உறுதியாகி இருக்கிறது. வயதான விவசாய பெரியவர் தாக்கப்படவில்லை, இதன் உண்மைத்தன்மை எனக் கூறி பொய் பிரச்சாரத்தை செய்து இருக்கிறார்கள் எனத் தெளிவாய் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader