விவசாயிகள் போராட்டத்தில் கோயில்களை தாக்குவதாக தவறாகப் பரவும் 2022ல் நடந்த பஞ்சாப் கலவர வீடியோ !
பரவிய செய்தி
விவசாயிகள் போராட்டம் என்று பொய்யாக அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட கூட்டம் செய்யும் செயலை பாருங்கள் மக்களே.. இவர்களை விவசாயிகள் என்று நம்ப வேண்டுமாம்..
மதிப்பீடு
விளக்கம்
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் பிப்ரவரி 18 ஆம் தேதி விவசாயிகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே நான்காவது பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவசாயிகள் எனக் கூறிக் கொள்ளும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவில்கள் மற்றும் கோவில்களை சுற்றியுள்ள இடங்களை தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி 2:08 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
So-called farmers “Khalistanis” have attacked a Hindu temple and the shops around the temple. Is this really a protest for farmers or the unnecessary rage against Hindus?
Nihang Sikh are following the path of Islamists now!#FakeFarmers #FarmerProtestInDelhi pic.twitter.com/JKcieJoY6m
— Janmajit (@IamUrMaven) February 18, 2024
So-called farmers “Khalistanis” have attacked a Hindu temple and the shops around the temple. Is this really a protest for farmers or the unnecessary rage against Hindus?#FarmerProtest2024 #shame #UPPoliceexam #breaking
pic.twitter.com/8QLmoryTdC— Kanha2023sharmaji (@Kanhasharmaji) February 19, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிகிறது.
மேலும் பரவி வரும் இதே வீடியோ, Republic World என்ற யூடியூப் பக்கத்தில், “பட்டியாலா செய்திகள் | காலிஸ்தானி-சிவசேனா ஆதரவு மோதலின் போது கோயில் தாக்குதலின் புதிய வீடியோ எடுக்கப்பட்டது” என்ற தலைப்பில் கடந்த 2022 ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவில் உள்ள காட்சிகளும், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவின் காட்சிகளும் ஒரே போல் இருப்பதை கீழே உள்ள புகைப்படத்தின் மூலம் உறுதி செய்யலாம்.
இது குறித்து கடந்த 2022 ஏப்ரல் 30 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல், “பட்டியாலாவில் ஊரடங்கு உத்தரவு, ‘காலிஸ்தான் எதிர்ப்பு’ பேரணியால் வன்முறை வெடித்தது” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காலிஸ்தான் எதிர்ப்பு” அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்த சிவசேனா (பால் தாக்கரே) உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தவிர்க்க, போலீசார் வானத்தை நோக்கி பல ரவுண்டுகள் சுட்டதை அடுத்து, பஞ்சாபின் பாட்டியாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், சீக்கிய ஆர்வலர்கள் மற்றும் நிஹாங்குகள் காளி மாதா கோவிலுக்கு வெளியே வாள்களை காட்டிக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் இரு தரப்பினராலும் கல் வீச்சுக்கு வழிவகுத்தது, மோதலில் இரண்டு போலீசார் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேசியக் கொடியை அவமதிக்கும் விவசாயிகள் எனத் தவறாகப் பரப்பப்படும் கனடா வீடியோ !
இதற்கு முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவில் நடத்திய போராட்டத்தை, விவசாயிகள் போராட்டம் என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வந்தனர். இது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், விவசாயிகள் கோவில்களை தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் வீடியோ, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் காலிஸ்தான் எதிர்ப்பாளர்கள் இடையே பஞ்சாபில் ஏற்பட்ட கலவரத்தின் போது கடந்த 2022ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.