ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டவரை விவசாயிகள் எரித்தார்களா ?
பரவிய செய்தி
விவசாயிகளின் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றியெரிகிறது.
மதிப்பீடு
விளக்கம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டவர் பற்றி எரிவதாக 29 நொடிகள் கொண்ட செல்போன் நெட்வொர்க் டவர் எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஜியோ டவர் குறித்து இந்தியில் எழுதப்பட்ட வாசகத்துடன் கூடிய டிக்டாக் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவே சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
இந்தியாவில் நிகழ்ந்த செல்போன் டவர் தீ விபத்து தொடர்பான கீ வார்த்தைகளை கொண்டு தேடுகையில், ” உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் அமைக்கப்பட்ட செல்போன் டவர் தீப்பிடித்ததாக amarujala எனும் இணையதளத்தில் 2017-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி வெளியான புகைப்படங்களுடன் கூடிய செய்தி கிடைத்தது.
இதுகுறித்து மேற்கொண்டு தேடுகையில், 2017 ஜூன் 28-ம் தேதி நியூஸ்18 இந்தியில் வீடியோவுடன் வெளியான செய்தி கிடைத்தது. சார்ட் சர்கியூட் காரணமாக வீட்டின் மீது இருந்த டெலிபோன் டவர் எரிந்துள்ளது. வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற டவர் பகுதியும், செய்தியில் வெளியான புகைப்படத்தில் இடம்பெற்ற டவர் பகுதியும் ஒன்றாக உள்ளன.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் ஜியோ நெட்வொர்க் பயன்பாட்டை புறக்கணிக்க வேண்டும் என முழக்கத்தை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஜியோ டவர்களின் இணைப்பை துண்டிக்கும் முயற்சியில் இறங்கினர். இதுவரை பஞ்சாப் மாநிலத்தில் 1500 டெலிகாம் டவர்களின் இணைப்பை துண்டித்து சேதப்படுத்தி உள்ளதாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
#WATCH Villagers of Tibbi Kalan in Punjab’s Firozpur vandalise a telecom tower to express their support towards farmers protesting against the three farm bills pic.twitter.com/sCWMYiU0Kq
— ANI (@ANI) December 28, 2020
முடிவு :
நம் தேடலில், விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜியோ நிறுவனத்தின் டவர்களை சேதப்படுத்தி வருவது உண்மை என்றாலும், ஜியோ டவரை எரித்ததாக கூறுவது தவறானது. ஜியோ டவரை விவசாயிகள் எரித்ததாகப் பரப்பப்படும் வீடியோ 2017-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.