2024 ஒலிம்பிக்கில் விளையாட பவானி தேவி தகுதி பெற்றதாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

பரவிய செய்தி

2024 ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் பவானி தேவி – பாலிமர் நியூஸ்

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 26 அன்று பாரீசில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வாள்வீச்சாளரான பவானி தேவி 2024 ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் என்று கூறி பாலிமர் நியூஸ், ஜீ தமிழ் நியூஸ் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 2024 ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் விளையாட்டு வீரரும் இவர் தான் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

X Link | Archive Link

X Link | Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி, 2024 ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது குறித்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதையும், தகுதி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் வருகின்ற 01 ஏப்ரல் 2024 க்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என்பதையும் அறிய முடிகிறது.

மேலும் ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, வாள்வீச்சு போட்டிக்காக இந்த ஆண்டு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து olympics.com பக்கத்தில் ஆய்வு செய்ததில், 2024 ஒலிம்பிக்கிற்காக இந்தியாவிலிருந்து தகுதி பெற்றுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலைக் காண முடிந்தது. அதில், பவானி தேவியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் இதுவரை 39 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

திடீர் குழப்பம் ஏன் ?

நேற்று (பிப்ரவரி 05, 2024), வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி குறித்து இந்திய ஒலிம்பிக்ஸின் எக்ஸ் பக்கத்திலிருந்து,ஒலிம்பிக்களுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை! பவானி தேவி !” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் “டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற முதல் வீராங்கனை” என்று குறிப்பிடுவதற்கு பதில், கடந்த முறை நடைபெற்ற ஆண்டை குறிப்பிடாமல் வெறும் “ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது.

எனவே இந்த பதிவு சமூக ஊடகங்களில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில், அந்த பதிவை நீக்கிவிட்டு, தற்போது “டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றார்” என்று குறிப்பிட்டு அதே வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: சிபிஎஸ்சி புத்தகத்தில் டேட்டிங், ரிலேஷன்ஷிப்ஸ் பாடப்பிரிவுகள் உள்ளதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

முடிவு:

நம் தேடலில், 2024 ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் பவானி தேவி என்று ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. அவர் தகுதி பெற்றது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader