1947க்கு பிறகு காஷ்மீர் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் ஆர்ஆர்ஆர் படமா ?
பரவிய செய்தி
1947க்கு பிறகு காஷ்மீர் திரையரங்குகளில் வெளியான முதல் படம் ஆர்ஆர்ஆர்.
மதிப்பீடு
விளக்கம்
1947ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீர் பகுதியில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் படமானது தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் என ஒர் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
2022ம் ஆண்டுச் செப்டம்பர் 18ம் தேதி புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்களால் முதல் மல்டிஃபர்போஸ் சினிமா கட்டிடம் திறக்கப்பட்டது. செப்டம்பர் 20ம் தேதி ஸ்ரீநகரில் முதல் மல்டிப்ளக்ஸ் திறக்கப்பட்டது.
A historic day for J&K UT! Inaugurated Multipurpose Cinema Halls at Pulwama and Shopian. It offers facilities ranging from movie screening, infotainment and skilling of youth. pic.twitter.com/QraMhHXSuN
— Office of LG J&K (@OfficeOfLGJandK) September 18, 2022
1989ல் நடந்த பிரிவினைவாத தாக்குதல்களுக்குப் பிறகு காஷ்மீரில் திறக்கப்படும் முதல் திரையரங்கு எனப் பிசினஸ் ஸ்டாண்டர்ட்(Business ஸ்டாண்டர்ட்) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் 1980களுக்கு முன்பு பல திரையரங்குகள் இருந்தன. 1990களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இவை அனைத்தும் மூடப்பட்டன. 1996ல் பல்வேறு முயற்சி செய்தும் நடத்த முடியாமல் இரு திரையரங்குகள் மூடப்பட்டன.
1999ல் லால் சவுக்(Lal Chowk) எனும் இடத்தில் உள்ள ரிகள் திரையரங்கில்(Regal Cinema) Pyar Koyi Khel Nahi படம் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அது பயங்கரவாத தாக்குதல்களால் ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. மேலும், ஸ்ரீநகரின் கடைசித் திரையரங்கு 1999ல் மூடப்பட்டது.
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதில், துணைநிலை ஆளுநர் திறந்து வைத்த மல்டிப்ளக்ஸ் திரையங்கில் ஓட்டப் பந்தய விளையாட்டு வீரர் மில்கா சிங் உடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான பாக் மில்கா பாக் (Bhaag Milkha Bhaag) மற்றும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படங்கள் வெளியிடப்பட்டது. இதை துணைநிலை ஆளுநரின் பதிவுகளில் பார்க்கலாம்.
காஷ்மீர் திரையரங்குகளில் அக்டோபர் முதல் தேதியில் இருந்து பொன்னியின் செல்வன், ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், 1947க்கு பிறகு முதல் முறையாக காஷ்மீரில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர் எனக் கூறும் தகவல் தவறானது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் திறக்கப்பட்ட திரையரங்குகளில் பாக் மில்கா பாக் மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய இரு திரைப்படங்கள் முதல் நாளில் வெளியிடப்பட்டது என்பதே உண்மை என அறிய முடிகிறது.