மீன்களில் கலப்படமா? கண்டறிவது எப்படி?
பரவிய செய்தி
சென்னையில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஃபார்மலின் மீன் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!
மதிப்பீடு
சுருக்கம்
தனியார் பத்திரிக்கை சார்பில் சென்னையில் வாங்கப்பட்ட ஆய்வு செய்தப்போது 30-இல் 11 மீன் மாதிரிகளில் ஃபார்மலின் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விளக்கம்
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் குறைந்த விலை ஃபார்மலின் கண்டறியும் கருவியினை கொண்டு THE HINDU நாளிதழுக்காக நடத்தப்பட்ட ஆய்வில் ரசாயனம் கலந்திருப்பதாக உறுதிச்செய்துள்ளனர். கடந்த ஜுலை 4 சிந்தாதிரிப்பேட்டை, வேலூர், நீலாங்கரையிலிருந்து எடுக்கப்பட்ட 13 மீன் மாதிரிகளில் ஒன்றில் மட்டும் ரசாயனம் கலந்திருந்தது. ஆனால் ஜீலை 10-ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேட்டில் வாங்கிய மீன்களை ஆய்வு செய்தப்போது 17 மாதிரிகளில் 10-இல் ரசாயனம் கலந்திருந்தது. மொத்தம் எடுக்கப்பட்ட 30 மாதிரிகளில் 11-இல் ரசாயனம் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபார்மலின் ரசாயனமானது ஆய்வுக்கூடங்களில் வைக்கப்பட்ட உயிரினங்களின் உடல்கள் நீண்ட நாட்கள் கெடாமல் வைக்க பயன்படுத்துவதாகும். இது மீன்களை பதப்படுத்துவதற்காக உபயோகிப்பது உடலுக்கு பெறும் கேடு விளைவிக்கும். இது கண், தொண்டை தோல் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இதுவே தொடர்ந்தால் சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இன்று இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக மீன்களில் கலப்படம் இருப்பதாக வதந்திகள் பரப்புகின்றனர், தமிழ்நாட்டில் தேவைக்கு குறைவாகவே மீன்கள் இருப்பதால் பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்த அவசியம் இல்லை எனவும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் மீன்களில் கலப்படம் இருக்கிறதா என ஆய்வு செய்தப்பின் தெரிவிக்கப்படும் என்றார்.
அதிகம் மீன் உண்ணும் மாநிலமான கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் 6000 கிலோ மீன்களில் ஃபார்மலின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய மீன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி ஒரு கிலோ மீனில் 63.9 மி.கிரசாயனம் இருந்தது.
2011-ஆம் ஆண்டு யூ.எஸ் . தேசிய டாக்ஸிக்காலஜி ப்ரோக்ராமானது போர்மலினில் மனிதர்களுக்கு கேன்சரைஉண்டாகும் என தெரிவித்திருந்தது .
“ஃபார்மலின் ரசாயனமானது மிகத்தீவிரமான தீங்குகளை ஏற்படுத்தும். உடலில் மெட்டபாலிக் முறையை தூண்டி விட்டு நச்சுக்களை உண்டாகும். சமைத்தாலும் இந்த நச்சு நீங்காது.” என்கிறார் சுகாதார நிபுணர் டாக்டர்.மாத்தியூ தாமஸ்.
மீன்களில் கலப்படம் கண்டறிவது எப்படி?
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) மற்றும் மத்திய மீன் உற்பத்தி தொழில்நுட்ப நிலையம் (CIFT) மீன்களில் ஃபார்மலின் மற்றும் அமோனியா இருப்பதை எளிய முறையில் கண்டறிய RAPID DETECTION KIT-ஐ வெளியிட்டுள்ளனர். அதன் செய்முறையை கீழ்கண்டவாறு செய்யலாம்,
1. கரைசல் A -வை வினைப்பொருள் B -க்கு மாற்ற வேண்டும் .
2.பாட்டிலை B -ஐ இறுக்கமாக மூடி இரண்டு நிமிடம் நன்றாக குழுக்க வேண்டும்.
3. காகிதத்தாளை (PAPER STRIP) எடுத்து மீன்களின் வெவ்வேறு இடங்களில் 3-4 முறை நன்றாக தேய்க்க வேண்டும்.
4. காகிதத்தில் ஒரு துளி வினைப்பொருளை இட வேண்டும்.
5. 1-2 நிமிடம் நிறம் மாறுவதற்கு காத்திருந்து பிறகு அதனை கொடுக்கப்பட்ட விளக்கப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்து கண்டறிய வேண்டும் .
குறிப்பு: மீன் உறையவைக்கப்பட்டிருந்தால் அது உருகும் வரை காத்திருந்து பிறகு ஆய்வு செய்யவேண்டும் . ஆய்வு செய்து இரண்டு நிமிடத்திற்கு பிறகு நிறம் மாறினால் அதை எடுத்துக்கொள்ள கூடாது.
தனியார் நிறுவனம் 25 STRIP உடன் கெமிக்கல் கலவையை விற்பனை செய்கிறது. ஒரு ஸ்ட்ரிப் விலை ரூ. 3. பெரிய அளவில் தேவை மற்றும் உற்பத்தி அதிகரித்தால் 25 சதவீத அளவுக்கு விலைக்குறைய வாய்ப்பிருப்பதாக கொச்சி CIFT இயக்குனர் டாக்டர்.ரவிசங்கர் தெரிவித்தார்.
மீன்களில் கலப்படம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் இன்று சோதனைகள் நடத்தி உள்ளனர். முடிவை ஒரு சில நாட்களில் எதிர்பார்க்கலாம். முடிவு எவ்வாறாக இருப்பினும் நாம் உண்ணும் உணவில் கலப்படம் இருக்கிறதா என ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.