ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பரவும் தவறான செய்தி !
பரவிய செய்தி
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை.. இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
மதிப்பீடு
விளக்கம்
“2024 ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை. ‘இந்திய வங்கிகள் சங்கத்திடம்’ (IBA) இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்” என்று குறிப்பிடப்பட்ட செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அப்பதிவுகளில் “இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சவுக்கு மீடியா உட்பட பல பக்கங்கள் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6… pic.twitter.com/Yme2Xu1eZQ
— Spark Media (@SparkMedia_TN) December 12, 2023
ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
# இதெல்லாம் இங்கிலாந்து பிரதமரோட மாமனார் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி பார்த்தா நம்ம நாட்டை பத்தி என்ன நினைப்பாரு..! pic.twitter.com/R5jlHG5g2s
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) December 13, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஐந்து நாள் வேலைத் திட்டம் குறித்து ராஜ்யசபாவில் கடந்த டிசம்பர் 05 அன்று கேள்வி (கேள்வி எண்: 211) எழுப்பப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. அதற்குப் பதிலளித்துள்ள நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை தினங்களாக அறிவிக்க ஐபிஏ (IBA) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தக் கோரிக்கை நிதி அமைச்சகத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது எதிர்காலத்தில் கொண்டுவரப்படுமா என்பது குறித்து, இதற்கான பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஐந்து வார நாட்களில், வேலை நேரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசினஸ் டுடே தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி.. சுவிஸ் வங்கியில் ரூ. 30,500 கோடியாக உயர்ந்த இந்தியர்களின் பணம் !
இதற்கு முன்பும் வங்கி குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இந்த கோரிக்கை குறித்து நிதி அமைச்சகம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதையும் அறிய முடிகிறது.