ரூ6000 நிவாரண நிதியை வழங்கக் கூடாது என பாஜக வழக்கு தொடர்ந்ததாகப் பரவும் போலிச் செய்தி !
பரவிய செய்தி
புயல் வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாயை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு. – நியூஸ் தமிழ்
மதிப்பீடு
விளக்கம்
கடந்த டிசம்பர் 04 மற்றும் 05 அன்று மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூபாய் 6௦௦௦, உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என வெள்ள நிவாரண தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ள நிவாரண நிதியான 6000 ரூபாயை மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி ‘நியூஸ் தமிழ் 24×7 ‘ ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்களால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
இவ்வளவு தான் சங்கிகள்.. #மக்கள்விரோத_பாஜக pic.twitter.com/55TD9bfGAk
— மித்ரன் .. (@sultan_Twitz) December 11, 2023
இதுதான் இவனுங்களோட உண்மை முகம்… pic.twitter.com/SRcVuXmU93
— திராவிட மாடல் (@dravidam_100) December 11, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த நியூஸ் கார்டை ‘நியூஸ் தமிழ்‘ ஊடகம் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
வெள்ள நிவாரணத் தொகைக்கு எதிரான வழக்கு குறித்து தேடியதில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், “தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கக்கூடிய முடிவு பாராட்டக்கூடியது. ஆனால் தமிழக அரசு நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்படும். நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரக்கூடிய நிலையில், நிவாரண நிதியையும் வங்கி கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.” என்பது குறித்து தினகரன் இணையதளத்தில் கடந்த டிசம்பர் 11 அன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கடந்த டிசம்பர் 9 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று @BJP4Tamilnadu கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi… pic.twitter.com/UC8FKZdmvv
— K.Annamalai (@annamalai_k) December 9, 2023
மேலும் நியூஸ் தமிழ் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடியதில், “ரொக்கமாக நிவாரணம் – எதிர்த்து வழக்கு” என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 11 அன்று நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில் “வெள்ள நிவாரண நிதி 6,000 ரூபாயை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு; ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக மனு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதனை “நிவாரண நிதி வழங்கக் கூடாது – பாஜக” என்ற தலைப்பில் எடிட் செய்து சிலர் தவறாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: ‘அண்ணாமலை ஒரு மனநோயாளி’ என ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
மேலும் படிக்க: நீட் விலக்கு இயக்கத்தில் கையெழுத்திட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !
முடிவு:
நம் தேடலில், ரூ6000 நிவாரண நிதியை வழங்கக் கூடாது என பாஜக வழக்குப் போட்டு உள்ளதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.