This article is from Oct 29, 2021

2ஜி விவகாரம்: முன்னாள் சிஏஜி வினோத் ராய் மன்னிப்பு கேட்டது எதற்காக ?

பரவிய செய்தி

2ஜி சம்பந்தமாக நான் சொன்னது அனைத்தும் பொய். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய முன்னாள் சிஏஜி வினோத் ராய்.

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிகக் குறைவான உரிமைக் கட்டணங்களுக்கு விற்றதால் அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு தணிக்கை அறிக்கை வெளியாகியது. இந்திய அரசியலில் 2ஜி அலைக்கற்றை தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர் வினோத் ராய்.

இதுதொடர்பான வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் திகார் சிறைக்கு சென்றனர். ஆனால், டிசம்பர் 21, 2017-ல் சி.பி.ஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனீ, ” வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை என்று ஒரே வரியில் தீர்ப்பளித்தார். தீர்ப்பிற்கு பிறகு நீதிபதி சைனீ, 2ஜி வழக்கில் சி.பி.ஐ தரப்பானது தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. சி.பி.ஐ குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. கடந்த இத்தனை வருடங்களாக வழக்கு தொடர்பாக தகுந்த ஆதாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாகவும் ” கூறி இருந்தார். எனினும், இந்த வழக்கில் மேல் முறையீடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை தொடர்பான விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக முன்னாள் சிஏஜி வினோத் ராய் மன்னிப்பு கோரியதாக வெளியான தகவல் செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் மன்னிப்பு சமூக வலைதளங்களில்  அரசியல் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அக்டோபர் 28-ம் தேதி கலைஞர் செய்தியில், ” 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்! ” என வெளியிட்ட நியூஸ் கார்டை பயன்படுத்தி மீம்ஸ் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சொன்னது அனைத்தும் பொய் என வினோத் ராய் கூறியதாக மீம்ஸ் மற்றும் கனிமொழி மற்றும் ஆ.ராசா குறித்த பதிவுகளும் திமுகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

2ஜி விவகாரத்தில் முன்னாள் இந்திய தலைமைக் கணக்காயர்(சிஏஜி) வினோத் ராய் மன்னிப்பு கோரியது, காங்கிரஸ் எம்பி ஒருவர் பற்றி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்பதற்காவே, திமுக குறித்து அல்ல.

2014-ம் ஆண்டு செப்டம்பரில் டைம்ஸ் ஆப் இந்தியா சேனலில் அர்னாப் கோஸ்வாமிக்கு வினோத் ராய் அளித்த பேட்டியின் போது, ” 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தமது தணிக்கை அறிக்கையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பிக்கள் சஞ்சய் நிரூபம், சந்தீப், அஸ்வானி உள்ளிட்டோர் நெருக்கடி கொடுத்ததாக ” தெரிவித்து இருந்தார்.

வினோத் ராயின் பேச்சை எதிர்த்து சஞ்சய் நிரூபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் வினோத் ராய் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு எழுத்து மூலமாக சமர்ப்பித்த வாக்குமூலத்தை ட்விட்டரில் சஞ்சய் நிரூபம் பகிர்ந்து இருக்கிறார்.

Twitter link | Archive link 

அதில், ” தனது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம்பெறாமல் இருக்க நாடாளுமன்ற கணக்குக் குழு கூட்டத்தின்போதோ, நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றபோதோ காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிரூபம் நெருக்கடி கொடுத்ததாக தவறுதலாக, பிழையாக குறிப்பிட்டு விட்டேன் என்பதை உணர்கிறேன்.
பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வெளியான பேட்டிகளில் சஞ்சய் நிரூபமிற்கு எதிராக நான் கூறியவை உண்மைக்குப் புறம்பானவை. என்னுடைய பேட்டியால், சஞ்சய் நிரூபம் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, அனுசரித்து சஞ்சய் நிரூபம் இந்த விவகாரத்தை முடித்து வைப்பார் என்று நம்புகிறேன் ” என இடம்பெற்றுள்ளது.
எனினும் 2ஜி விவகாரத்தில் ஒருவர் பற்றி அவதூறாக பேசி பின் மன்னிப்பு கேட்டுள்ளது இவரது நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும்.
முடிவு : 
நம் தேடலில், 2ஜி சம்பந்தமாக நான் சொன்னது அனைத்தும் பொய் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் சிஏஜி வினோத் ராய் கூறவில்லை. திமுக குறித்தும் குறிப்பிடவில்லை.
2ஜி விவகாரத்தில் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் பெயரை சேர்க்க கூடாது என காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிரூபம் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக ஊடகத்தில் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வினோத் ராய் மன்னிப்பு கேட்டும், பேட்டிகளில் சஞ்சய் நிரூபமிற்கு எதிராக நான் கூறியவை உண்மைக்குப் புறம்பானவை என்றே கூறி இருக்கிறார் என அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader