காந்திச் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட அரியப் படமா ?

பரவிய செய்தி
மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
மதிப்பீடு
சுருக்கம்
Nine Hours to Rama என்ற பிரிட்டிஷ் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாத்மா காந்தி கொலை செய்யப்படும் காட்சி.
விளக்கம்
இந்தியா சுதந்திரம் அடைந்த 165 நாட்களில் மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் காந்தியை கோட்சே சுட்டுக் கொலை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி சமூக வலைதளங்களில் ஓர் படம் வைரலாகியுள்ளது.
1948 ஜனவரி 30 ஆம் தேதி மாலை நேரத்தில் நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் பெரட்டா என்ற இத்தாலிய ரக சிறிய கைத்துப்பாகியால் மகாத்மா காந்தியை கோட்சே மூன்று முறை சுட்டுக் கொலை செய்தார். இந்நிகழ்விற்கு பின் கோட்சே தானாகவே காவலர்களிடம் சரணடைந்தார்.
இந்திய பிரிவினைக்கு ஆதரவாக காந்தி செயல்பட்டதாகவும், பாகிஸ்தானுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறியதாலும் இக்கொலையை செய்ததாக கோட்சே வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பிறகு கோட்சேவுக்கு மரணதண்டனை அளிப்பதாக உத்தரவிட்டனர். 1949 நவம்பர் 15 அன்று நாத்தூராம் விநாயக் கோட்சே அம்பாலா சிறையில் சாகும்வரை தூக்கிலிடப்பட்டார்.
காந்தியின் கொலை வழக்கில் கண்ணால் பார்த்த சாட்சிகள் மட்டுமே இடம்பெற்றன. காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் எந்தவொரு படமும் எடுக்கப்படவில்லை என்று தெளிவாக தெரிகின்றது. இருப்பினும் காந்தியை கோட்சே கொலை செய்வது போன்று சமூக வலைதளங்களில் காணப்படும் படங்கள் அனைத்தும் ஓர் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளே ஆகும்.
ஆம், 1963 ஆம் ஆண்டில் வெளியான ‘Nine Hours to Rama’ என்ற பிரிட்டிஷ் திரைப்படத்தில் வரும் காட்சிகளை, காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று நம்பியுள்ளனர்.
காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஒன்பது மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் படமாக எடுத்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள் இங்கிலாந்திலும், சில பகுதிகள் இந்தியாவிலும் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தி காந்தி கோட்சேவால் கொலை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் என்று கூறி வதந்தியை பரப்பியுள்ளனர்.