This article is from Oct 02, 2018

காந்தியை தவறாகச் சித்தரிக்கும் படங்கள்.

பரவிய செய்தி

இந்தியாவின் தேச தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்கள் பெண்களுடன் இருக்கும் அரியப் புகைப்படங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

திரைப்படங்களில் இடம்பெற்ற புகைப்படங்களையும், போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்ட படங்களையும் பார்த்து மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களின் போது காந்தி அவர்களின் கருத்துகள், படங்கள் போன்றவை வலைதளங்களில் பகிரப்படுவது வழக்கம். எனினும், அதை விட அதிகமாக காந்தி பற்றிய தவறான படங்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன.

காந்தி ஒரு பெண்ணுடன் நடனமாடும் படம், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படம், காந்தியை கோட்சே சுட்டுக் கொல்வது போன்ற படங்கள் என பல படங்கள் வலைதளங்களைச் சுற்றி வருகின்றன.

இப்படங்கள் அனைத்தும் போலியானவை மற்றும் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆகும். இவற்றின் உண்மை நிலையை அறியாதவர்களும், காந்தியின் மீதான வெறுப்புணர்வுக் கொண்டவர்களும் இப்படங்களை அதிகளவில் பரவச் செய்கின்றனர்.

 மகாத்மா காந்தி அவர்கள் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்று பரவும் படமானது போலியானது ஆகும். அந்த படத்தில் காந்தியின் உடன் இருப்பவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்.

இப்படமானது 1946 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. இப்புகைப்படத்தை போட்டோஷாப் மூலம் பெண்ணுடன் இருப்பது போன்று மாற்றியமைத்து இணையத்தில் பரவச் செய்துள்ளனர். அப்படங்கள் போலியானவை என்று பல செய்திகளில் கூறினாலும், அதை அறியாமல் பலர் பகிர்ந்த வண்ணமே உள்ளனர்.

 மற்றொரு படமொன்றில் காந்தி அவர்கள் ஒரு பெண்ணுடன் நடனமாடுவது போன்று உள்ளது. அப்படம் போலியானது என்று சொல்வதை விட, அப்படத்தில் இருப்பவர் காந்தியே இல்லையென்று தான் கூற வேண்டும்.  அப்படத்தை உற்றுப்பார்த்தால் நன்றாகப் புரியும், காந்தி என்று கூறுபவரின் உடல் தசைகள் பலமாக இருப்பது போன்று காட்சியளிகின்றது. அந்த படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார்.

காந்தி கொலைச் செய்யப்படும் தருணத்தில் கோட்சே கையில் துப்பாக்கியோடு நிறுக்கும் படங்களும் மிகவும் பிரபலமானவை. ஆனால், அந்த புகைப்படங்கள் “Nine hours to Rama” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இறுதி காட்சியாகும்.

ஆக, காந்தியைப் பற்றிய தவறானக் கருத்துகளுடன் வரும் படங்கள் பெரும்பாலனவை போலி என்று நிரூபணம் ஆகியுள்ளது. அவரின் கருத்தின் மீதும், அவரின் மீதும்  வேறுபாடுகள் இருப்பின், நேர்மையாக எதிர்க்க வேண்டுமே தவிர தவறான செய்திகளை உருவாக்கியல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader